Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • குருதேவர் அருளியவை>
  • குருபாரம்பரிய வாசகங்கள் சில
  • குருபாரம்பரிய வாசகங்கள் சில

    குருபாரம்பரிய வாசகங்கள் சில

    (1) “தனி மனிதர்கள் அருள்நீர் நிறைந்த கார்மேகங்களாக அருள்மழை பொழிதல் வேண்டும். அப்பொழுதுதான் அருள்நீர் எங்கும் ஊற்றெடுத்து தாகங்களையும், பசிகளையும் தணிக்க வகை செய்யும்” - என்று குருபாரம்பரிய வாசகத்தையே உங்களுக்கு அருளார்ந்த அறிவுரையாக வழங்குகிறோம்.

    தேவகுமாரன், தேவதூதர் எப்படித் தோன்றுகின்றனர்?

    (2) “…. மானுடர்களில் தேவர்கள், தேவகுமாரர்கள், தேவதூதர்கள் பிறப்பெடுத்துத் தொண்டாற்றுவது பதினெண் சித்தர்களின் அருட்பணித் திட்டமே. பதினெண் சித்தர்களின் நேரடி விந்து வழி வாரிசுகளால்தான் ‘அறிவுரை’, ‘அருளுரை’, ‘அறிவார்ந்த அருளுரை’, ‘அருளார்ந்த அறிவுரை’ வழங்க முடியும்! முடியும்!! முடியும்!!! இவற்றின் பயனாகத்தான் இந்திய மண்ணில் அருளாளர்கள் வாழையடி வாழையாகத் தோன்றிச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ‘தமிழினம் அருளாளர்களின் தாய்’; ‘தமிழ்மொழி அருளாளர்களின் விழி, உயிர், செயல், சிந்தனை…’; ‘தமிழகம் ஒரு கடவுளர் நாடு’…. எனவேதான், தமிழர்களில் நாயன்மார்களும், ஆழ்வார்களும், மெளனிகளும், ஞானிகளும், தவசிகளும், மறையோர்களும், முறையோர்களும், நெறியோர்களும், வேதியர்களும், தவமுனிகளும், இருடிகளும், சித்தியர்களும்…. தோன்றிக் கொண்டே இருந்துங் கூட மக்களிடையே புதிய அருளாசையை, அளப்பரிய அருளார்வத்தை உருவாக்கவே முடியவில்லை. எந்த அற்புதமும், வியப்பும், மாயமும், மந்திர தந்திர எந்திரச் செயலும்…. தமிழர்க்கு வியப்பாக இருந்ததில்லை. இப்படிப் பட்ட தமிழர்களை ஒன்று திரட்டி ஒற்றுமைப் படுத்தினால்தான் ‘உலக அருளாட்சி அமைக்க முடியும்! முடியும்!! முடியும்!!!’…. என்ற குருபாரம்பரிய வாசகத்தை மட்டுமாவது அச்சிட்டுப் பலருக்கும் வழங்குங்கள்.
    மேலே செல்ல…


    உலக மதங்கள் தோன்றிய விதம்

    (3) “…… உலகில் தமிழகத்தைத் தவிர அருளாளர்கள் தோன்றுவதரிது. அதிலும் இந்தியாவைக் கடந்து தோன்றிட்ட அருளாளர்கள் மிகச் சிலரே. அதனால்தான், மகப்பேறு இல்லாப் பல குடும்பங்களிடையே பிறந்த ஒரு மகவு சீராட்டி, பாராட்டி வளர்ப்பது போல கன்பூசியசும், சொராசிட்டரும், ஈசாவும்(இயேசு), முகம்மது நபியும்…. அவர்களது காலத்திலேயே விரிந்த செல்வாக்கைப் பெற்றனர். அவர்களுக்குப் பிறகு விரிந்த வளர்ச்சி உருவாகி உலகம் முழுதும் பரவிற்று. ஆனால், தமிழக இனம் பிறந்த குமரிக் கண்டத்துக்கு அருள் மழையாக விண்வெளி அண்டங்களிலிருந்து பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும் வந்து தங்கி அமிழ்தான தமிழில் அருள் மழையை வழங்கினர். அன்று முதல் என்றென்றும் பத்தியாளர்கள், சத்தியாளர்கள், முத்தியாளர்கள், சித்தியாளர்கள் காடு போல் தழைத்து வருகின்றனர் தமிழினத்தில். அதனால், தமிழர்கள் அருளாளர்களைப் போற்றிப் பேணிப் பயன்படுத்தி தாங்களும் உய்வடைந்து பிறரையும் உய்வடையச் செய்யும் பணியைச் சிறப்பாகச் செய்யாமல் உறங்கும் உணர்வைப் பெற்றனர். எனவேதான், நாற்பத்தெட்டு வகைச் சித்தர்களும், பதின்மூன்று வகை அருளாளர்களும் …. தொடர்ந்து பழமையான வழிபாட்டு நிலையங்களைப் போற்றிப் பாதுகாப்பதோடு புதிய புதிய வழிபாட்டு நிலையங்களைத் தோற்றுவித்துக் கொண்டே வருகிறார்கள். இருந்தும் தமிழர்களின் அருளுலக வாழ்வு அடிக்கடி இருள் நிறைந்ததாகி விடுகின்றது. இதனைத் தடுத்து தமிழர்களின் அருளுலக வாழ்வு ஒளி நிறைந்ததாகச் செய்யவே குருபாரம்பரியம், குருவாக்கு, குருவாசகம், திருவாக்கு, திருவாசகம், கருவாக்கு, கருவாசகம், அருள்வாக்கு, அருள்வாசகம், மருள்வாக்கு, மருள்வாசகம், எள்ளல் மாலை, ஏசல் மாலை, வணக்க மாலை, கும்பிடு மாலை, வழிபாட்டு மாலை, தொழுகை மாலை, அழுகை மாலை, அரற்றல் மாலை, புலம்பல் மாலை, கோள்மாலைகள் (ஞாயிறு மாலை, திங்கள் மாலை, புதன் மாலை, வியாழன் மாலை, வெள்ளி மாலை, சனிமாலை, இராகு மாலை, கேது மாலை) சூத்திரம், சூத்திறம், சூத்தரம், சாத்திரம், சாத்திறம், சாத்தரம், தோத்திரம், தோத்திறம், தோத்தரம், மந்திரம், மந்திறம், மந்தரம், எந்திரம், எந்திறம், எந்தரம் (ஏந்தரம் பாடவேறுபாடு அல்லது தனிக்கலை உண்டு), தந்திரம், தந்திறம், தந்தரம், மாந்தரம், மாந்தரீகம், தாந்தரம், தாந்தரீகம், ஏந்தரம், ஏந்தரீகம், நிடதம், இணை நிடதம், துணை நிடதம், நான்மறை, நான்முறை, நானெறி, நான்வேதம், மறை, மறையாந்தம், முறை, முறையாந்தம், நெறி, நெறியாந்தம், வேதம், வேதாந்தம், சித்தம், சித்தாந்தம், நாதம், நாதாந்தம், போதம், போதாந்தம், ஆகமம், மீமாம்சை… முதலியவைகளை மானுட இனத்துக்குப் பதினெண் சித்தர்கள் தங்களது மொழியான அன்புத் தமிழில் வழங்கினார்கள். இப் பேருண்மையினைத் தெரிய, அறிய, தெளிய, புரிய, உணர, நம்பத் தமிழர்களைப் பக்குவப் படுத்தவே பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றுகிறார்கள்…. - குருபாரம்பரிய வாசகம்.
    மேலே செல்ல…


    பன்னிரு திருமுறைகளும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும்

    (4) “…. பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் தமது 200 ஆண்டுகளின் முயற்சிகளின் அயர்ச்சியால் நிலையான அருளுலகக் காப்புக்காகத் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினார். இவ் வழிபாட்டு நிலையம் அருளுலகச் செழிப்பை வளர்க்க முடியாது போனால், தொடர்ந்து அருளுலகச் செழிப்பை விழிப்பாகக் காத்திட ஏட்டுலகில் நிலையான கோயில் ஒன்றைக் கட்டினார். இக்கோயில் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் தேடிச் சென்று கொணர்ந்து பதினெட்டு ஆண்டு வளர்த்த தேவகுமாரன் ஈசாவும், முகம்மது நபியும் பன்னிரண்டு அடியான்களை உருவாக்கியது போல் இவர் பன்னிரண்டு நூல் தொகுதிகளை ‘பன்னிரு திருமுறைகள்’ உருவாக்கும் பணியினைத் துவக்கினார்… (துவக்கினார் ≡ என்பதால் இவர், பன்னிரண்டு நூல்களையும் முழுமையாகப் பட்டியலிட்டார் என்று கருதவே முடியாது) இவரது மகன் கருவூர்த் தேவரே இப் பன்னிரண்டு நூல்களையும் கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் தொகுத்து ‘அருளுலக அரங்கேற்றம்’ செய்தார். இவர் தம் மகனான திருமாளிகைத் தேவரின் (காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் பேரனே திருமாளிகைத் தேவர்) பாடல்களையும் இந்தப் ‘பன்னிரு திருமுறை’ தொகுப்பு நூலில் சேர்த்தார். இவரே,

    “பன்னிரண்டு என்ற எண்ணிக்கை முருகனின் கண்களை நினைவு படுத்துகின்றன…”

    எனச் சில இடங்களில் எழுதுகிறார். இவரே

    “… பன்னிரண்டு மனிதர்களை அடியான்களாக உருவாக்கிய அருளாளர்கள் வெற்றி பெற்றது போல் தமிழர்களுக்கிடையில் வெற்றி பெற முடியாது என்பதை நாயன்மார்கள், ஆழ்வார்கள், நாற்பத்தெட்டு வகைச் சித்தர்கள்… உருவாக்கிய ஆயிரக் கணக்கான அடியார்கள் அணைந்த யாக விறகுகளாகி விட்டதை அறிந்தார். அதனால்தான் மனிதர்களை அருளுலக இருளகற்றும் அணையாச் சுடர்களாக ஆக்கத் திட்டமிட்டார். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தொகுக்கப் பட்டவுடன் அவரை அழைத்து வந்து மரியாதைகள் செய்து; அவர் விரும்பிய ஐம்பொன் சிலைகளை வார்த்து வழங்கி; அவரின் தொகுப்பைத் தமது பன்னிரு திருமுறை நூல் பட்டியலில் முதல் நூலாக ஏற்றார். ஆனால், பிற்காலத்தில் திருமால் வழிபாடு வைணவம் என்று தனிச் சமயமாக வளர்ந்து சிவநெறிக்குப் பகையானதாகவும், மறுப்பானதாகவும், எதிர்ப்பானதாகவும், வேறானதாகவும்…. செயல்பட்டிட்டது. இப் பகையைச் சிவநெறிச் செல்வர்களான சோழர்கள் எப்பாடுபட்டும் நெறிப் படுத்தவே முடியவில்லை. அதனால் முதல் நூலான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை விடுத்தே ‘பன்னிரு திருமுறைப் பட்டியல்’ தயாரிக்க வேண்டியதாயிற்று. அதற்குச் சேக்கிழார் பெருமானின் ‘திருத்தொண்டர் புராணம்’ உதவி செய்து பெருமை பெற்றது. அதனால், ‘பெரிய புராணம்’ (பெருமைக்குரிய புராணம்) என்றாயிற்று. குருபாரம்பரியத்தின் நிறைவு பன்னிரு திருமுறைப் பட்டியலாகிறது…. இனிக் குருபாரம்பரியம் எழுதுபவர் யார்? தமிழ்க் கருவான குருபாரம்பரியம் காப்பவர் யார்? கடல் கடந்த நாடுவாழ் கன்னித் தமிழரே குருபாரம்பரியம் காத்தற்குரியர்…."
    - குருபாரம்பரிய வாசகம்.

    இதன்படி, கருவூர்த் தேவர் குருபாரம்பரியச் செப்பேடுகளையும், ஓலைச் சுவடிகளையும் கடல் கடந்த நாடுகளுக்கு அனுப்பினார் என்ற வரலாற்றுப் பேருண்மை புலனாகின்றது.

    (5) நண்பர்களே! ‘குருபாரம்பரியத்தை முழுமையாக வெளியில் கூறக் கூடாது’ என்ற தடையும், யாரும் குருபாரம்பரியத்தை முழுமையாகக் கேட்கக் கூடாது (தெரிதல், புரிதல்) என்ற தடையும் விதிக்கப் பட்டுள்ளன. எனவேதான், யாம் அவ்வப்போது நமது நண்பர்களுக்குக் குருபாரம்பரிய வாசகங்களை தனித் தனி நூல்களாகத் தொகுத்தும்…. எம்மால் முடிந்தவரை எதையும் பொதுமக்கள் தெரியாத இரகசியம் என்று காக்காமல் செயல்படுகிறோம். இதேபோல் யாம், எவ்வித சாதி, சமய, இன, மொழி, நாட்டு… வேறுபாடு கருதாமலேயே அருளுலக வாரிசுகளை உருவாக்கி வருகின்றோம். ஏனென்றால், குருபாரம்பரிய வரலாற்றுப் படி எம் காலத்தில் அருளாட்சி அமைந்தே தீர வேண்டும். இதனைத் தஞ்சைத் தாத்தாவின் ஆணை வழிக் கல்வெட்டுகளும் வலியுறுத்துகின்றன. எமக்குக் கிடைத்து வரும் வெற்றிகளும், தோல்விகளும், தோல்வி மாற்ற வெற்றிகளும்…. எம்மால் அருளாட்சி அமைக்க முடியும் என்ற கருத்தைத் தெளிவாக்குகின்றன.

    இப்போது, தாத்தா கருவூர்த் தேவரின் முதன்மையான மாணாக்கர்களின் மறுபிறப்புக்களான நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பழம்பிறப்புக்கள் பற்றிய நினைவுகள் மலர, மலர, வளர, வளர, செழிக்கப் பல வரலாற்றுப் பேருண்மைகள் வெளிப்பட்டிடும். அவற்றால், சமய, சமுதாய, அரசியல் நன்மைகள் பல விளைந்திடும். எனவே, நீங்கள் ஆர்வமுடனும், அறிவுடனும், அக்கரையுடனும், பெருமுயற்சியுடனும் பதினெண் சித்தர்கள் வழங்கியுள்ள ஞானங்களையும், விஞ்ஞானங்களையும், பிற அறிவியல் கலைகளையும் கற்றுத் தேர்ந்து பயிற்சி செய்ய முற்படுங்கள். உங்களுடைய அநுபவங்களால்தான் இந்து மதத்தின் அருமை, பெருமைகள் மக்களுக்குப் புரிவிக்கப்படல் வேண்டும்.

    (6) நண்பர்களே! நமது நாட்டில் ஏழைகள் மிகுதியாகிக் கொண்டே போகிறார்கள். இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தி ஏழைகளே இல்லாத ஒரு சமுதாயத்தை நம்மைப் போன்ற அருளாளர்களால்தான் அமைக்க முடியும். ஆனால், சீர்திருத்தம், புரட்சி என்று கூறிக் கொண்டு அயோக்கியர்களும், சுயநலக் காரர்களும், வெறியர்களும்…. நம் நாட்டுப் பண்பாட்டுப் பாரம்பரியக் கூறுகளையும், அவற்றின் நிலைக் கலன்களையும், செயலகங்களையும், ஆணிவேர்களையும்… சிதைத்து வருகிறார்கள். இப்படிப் பட்ட நேரத்திலேதான் நாம் மிக வலுவோடும், நிறுவன நிர்வாகக் கட்டமைப்போடும், தெளிவான சட்டதிட்டக் கட்டுப்பாடுகளோடும் வளர வேண்டும். இன்று புகழ், பதவி, அதிகார வெறியர்களும் தலைமையேற்று அகம்பாவத்தோடும் ஆணவத்தோடும் வாழுகிறார்கள். இவர்களின் தன்னல மோகமும் வேகமும் இவர்களைச் சமுதாய விரோதிகளாகவும், துரோகிகளாகவும் ஆக்குகின்றன.

    எனவே, இவர்களைத் திருத்த முற்படுவதை விடப் புதிய நல்லவர்களை வல்லவர்களாக்கி அனைத்திலும் தலைமை தாங்கச் செய்வதே நல்லது. அதுதான் அருளாட்சி அமைக்கும் முயற்சிப் பணி. இப் பணியின் அடிப்படை செயல்திட்டமே அருட்பணி விரிவாக்கத் திட்டம். எனவே, பலரோடும் அஞ்சல் தொடர்பு கொண்டும், நேரில் நெஞ்சம் திறந்து பழகியும் அருட்பணி விரிவாக்கத் திட்டத்தைப் புரிந்து செயல்படுங்கள். விரிவஞ்சி இத்துடன் அஞ்சலை நிறைவு செய்கிறோம். உடனே நகல்கள் அனுப்பவும்.

    (ஒப்பம்)
    அன்பு
    ஞாலகுரு சித்தர் கருவூறார்.
    23.11.82.

    தொடர்புடையவை: