Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • எந்த மானுடம் இந்த மானுடம்>
  • தமிழ் வளர்த்த பெரியோர்கள்.
  • தமிழ் வளர்த்த பெரியோர்கள்.

    தமிழ் வளர்த்த பெரியோர்கள்.

    அறிமுக உரை

    இந்த எழுபத்தைந்து ‘வசன கவிதைகள்’ (Blank Verses) எமது இன்றைய நினைவாற்றலால் எழுதப்பட்டவை. இவற்றில் சொற்பிழைகள் இருக்கலாம். கவிதை வரிசைகளும், வரிகளும் மாறியிருக்கலாம். ஆனால், இவற்றால் பெரிய இழப்புக்கள் இல்லை.

    நான் “எந்த மானுடன் இந்த மானுடன்” என்ற தலைப்பில் சுமார் முன்னூறு (300) வசன கவிதைகளுக்கு மேல் மனப்பாடம் செய்து இருந்தேன். ஆனால், உருப்படியாக நூறு கூட நினைவிற்கு வரவில்லை. இதுபோல், எத்தனையோ பெரிய செய்திகள் எம்மால் மறக்கப்பட்டு விட்டனவோ தெரியவில்லை. யாம் எவ்வளவோ முயன்றும் எழுத்து மங்கியும், தாள் நைந்தும், நகலெடுக்கும் வசதி வாய்ப்புக்கள் இல்லாமலும் அழிந்து வரும் தமிழ்மொழிச் செல்வங்கள் ஏராளம். இவை, உலக வரலாற்றுத் துறைக்கும், அறிவுத் துறைக்கும், தமிழினப் பெருமைக்கும் உரிமைக்குமே ஈடு செய்ய முடியாத இழப்புக்கள். “தமிழ் வாழ்க” என்று குறுகிய தன்னல நோக்கோடு கூக்குரல் எழுப்பும் தலைவர்களும் அப்பாவித் தொண்டர்களுமே மிகுந்து வருகின்றனர். ஓர் உலகப் பழம் பெரும் தெய்வீகத் தொன்மொழியின் செல்வங்கள் அழிவதை எம்மால் தடுக்க முடியவில்லையே என்றுதான் வருந்துகிறோம் யாம்.

    இந்தச் சிறு பழம்பெரும் வசன கவிதை நூல், சென்ற நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டிலும் உரைநடை (Prose Order) எப்படி இருந்தது என்பதை விளக்க உதவிடும். மக்கள் பலரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கவிதை நடையில் சொற்செறிவும் பொருட்செறிவும் மிகுந்த உரைநடையைத் தோற்றுவித்த பெருமை ‘தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரால் (கி.பி. 785-1040) தோற்றுவிக்கப் பட்டது. இக் கருத்துக்குரிய சான்றுகளாகப் பல உரைநடை நூல்கள் உள்ளன.

    இவர் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் (கி.மு.100-கி.பி.150) அவர்களைப் பின்பற்றியே பழம்பெரும் இலக்கியங்களைத் தொகுப்பதிலும், புதியனவற்றை எழுதுவதிலும் ஈடுபட்டார். எனவே, தமிழ் உரைநடை அமராவதி ஆற்றங்கரை கருவூறாராலேயே விரும்பிப் பேணிப் போற்றி வளர்க்கப் பட்டிருக்கலாம் என்று கருதவும் இடமிருக்கிறது. அவரால் எழுதப்பட்ட உரைநடை நூல்களும் இருக்கின்றன.

    இவரது காலத்தில் எழுந்த ‘ஐம்பெருங் காப்பியங்களுள்’ ஒன்றான சிலப்பதிகாரம் ‘உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்றே பாராட்டப் படுகின்றது. அதில் காணப்படும் உரைநடைக்கு நிகராகவே சித்தர்களின் இலக்கியங்களும், பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தொகுத்த இலக்கியங்களும் இருக்கின்றன. அதனால் கி.மு. விலேயே தமிழ்மொழியில் வளமான நல்ல வாலிப்பான உரைநடை நூல்கள் இருந்திருக்கின்றன என்ற பேருண்மை தெளிவாகின்றது.

    இச் சிலப்பதிகாரத்துக்கு முன்பே தமிழில் நல்ல உரைநடை நூல்கள் (Books of Prose Order) இருந்திருக்கின்றன. பழந்தமிழ் நூல்களில் காணப்படும் உரைகள் கவிதை நடையில் எதுகை, மோனை நயத்தோடு இருப்பதைக் காணலாம். குறிப்பாக சங்க காலத்தில் ‘பெருந்தேவனார் பாரதம்’ என்ற நூலும்; ‘தகடூர் யாத்திரை’ என்ற நூலும் பொதுமக்கள் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்ட உரைநடை நூல்கள் என்ற குறிப்புக்கள் பல கிடைக்கின்றன. பல உரை ஆசிரியர்கள் இந்நூல்களை பற்றிக் குறிப்பதோடு ஆங்காங்கே சில பகுதிகளைச் சான்றாக எடுத்தாண்டுள்ளனர். எனவே, பழந்தமிழர்கள் ஏட்டில் சுருக்கமாக எழுதவும் மனப்பாடம் செய்வதற்கு எளிமை தேவை, எதுகை மோனை தேவை என்பதாலும் கவிதை நடையையே (Poetical form of order) முழுக்க முழுக்க கையாண்டனர் என்று கருதுவது தவறாகும். அதாவது, சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்மொழியில் உரைநடை நூல்களும் இருந்திருக்கின்றன என்பதே உண்மையாகும்.

    வரலாற்று ஆசிரியர்களால் கி.மு. 3000க்கும் முந்தியது என்று கருதப்படும் காலப் பழமையுடையது ‘தொல்காப்பியம்’. இதுதான் இப்போதைக்குத் தமிழர்கள் அறிந்துள்ள உலகம் உணர்ந்த மிகத் தொன்மையான நூல். அதுவும் இந்த நூல், ஓர் இலக்கண நூல் (A Grammer Book). இலக்கியங்கள் பல தோன்றிய பிறகுதான் அவற்றை ஒழுங்கு படுத்திட இலக்கண நூல்கள் தோன்றும். அப்படிப் பார்த்தால் இந்தத் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் சில ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியில் பல ஆயிரம் இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும். மேலும், தொல்காப்பியத்துக்கு முன்னரே நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் இருந்திட்டன என்பதற்குரிய அகச்சான்றுகள் தொல்காப்பியத்திலேயே இருக்கின்றன. அதை நோக்கும் போது தொல்காப்பியத்துக்கு முன் சில நூறாயிரம் ஆண்டுகள் (இலட்சம்) தமிழ்மொழி வளத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற பேருண்மை தெளிவாகிறது.

    இப்படிப் பார்க்கும் போது, தமிழ் ஆரம்பத்திலேயே உரைநடையும், கவிதையும் செல்வாக்குப் பெற்றிருந்தன என்ற பேருண்மை தெளிவாகும். அதனால், தமிழில் உரைநடை அண்மைக் காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று கருதுவது தவறாகும். இக் கருத்துக்குத் தொல்காப்பியத்திலும் சான்று உள்ளது. தொல்காப்பியத்தில் “அடிவரையறை யின்றி வரும் செய்யுள்” என்ற குறிப்பு உரைநடையைத்தான் குறிக்கிறது. இதில் ஐயமே இல்லை. எனவே, பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் உரைநடையில் எழுதியிருப்பது முற்கால மரபை ஒட்டியேயாகும் என்பது தெளிவாகிறது.

    தமிழ்மொழியில் உரைநடை அழகும், சுவையும், இனிமையும் மிக்க செய்யுள் நடையாகவே இருப்பது பெருமைக்குரியதாகும். அதுவும், ‘இறையனார்’ என்ற தமிழ்ப் புலவர் எழுதிய ‘களவியல்’ என்ற இலக்கண நூலுக்கு நக்கீரர் என்ற புலவர் கூறிய விளக்கவுரை (notes or commentary or explanatory notes of the Grammer book namely ‘The KALAVIYAL’) ஏட்டில் எழுதப் படாமல் (unwritten) ‘எழுதாக் கிளவி’யாக ஒன்பது தலைமுறைகள் வாய்வழிச் செய்தியாகவே கூறப்பட்டு மனப்பாடம் செய்யப்பட்டு வந்தது. அதாவது, சுமார் (60 x 9 = 540 ஆண்டுகள்; ஒரு தலைமுறை என்பது அறுபது ஆண்டுகளையே குறிக்கும். பிற்காலத்தில் வழக்கில் ஒரு தலைமுறை என்பது நூறு ஆண்டுகள் என்று கருதப்படும் மரபு தோன்றி விட்டது. எப்படியாயினும் ஒன்பது தலைமுறைகள் என்பது 600 முதல் 900 ஆண்டுக் காலப் பெரிய இடைவெளியையே குறிக்கிறது) அரை நூற்றாண்டுக் காலம் எழுதப்படாமல் இருந்து பிறகே ‘நீலகண்டனார்’ என்பவரால் ஏட்டில் எழுதப்பட்டது. இந்தப் பெரிய இடைவெளியில் எவ்வளவோ மறக்கப்பட்டும் மாற்றப் பட்டும் இருக்கலாம். அப்படி யிருந்தும் தமிழ் மொழியில் உள்ள மிகச் சிறந்த உரைநடையாக விளங்குகிறது, நக்கீரரின் உரைநடை. இவர் பல கவிதைகள் பாடிய மாபெரும் புலவர். எனவே, அக்காலத்துப் புலவர்கள் கவிதைகளிலும் உரைநடைகளிலும் பல நூல்கள் எழுதினர் என்பது தெளிவாகின்றது. இவர் சங்க காலத்தவர். இவரைப் போல் சங்க கால இலக்கண நூல்களுக்கு எழுதப் பட்ட உரைநடை நூல்கள் எதுவும் கிடைக்காமல் அழிந்து போய்விட்டன. இந்தக் காலத்திலே ‘தமிழ் வாழ்க’, ‘தமிழ் வளர்க’, ‘தமிழே எங்கள் உயிர்’, ‘தமிழ் ஆட்சி பெறல் வேண்டும்’, ‘உலகத் தமிழ்மொழிக் காப்பு அமைப்புகள் பெருக வேண்டும்’ … என்றெல்லாம் வெறிக் கூச்சல் கிளப்பும் நேரத்திலேயே பழம்பெரும் நூல்களைப் பாதுகாக்க, அச்சிட்டுப் பரப்ப, நகலெடுத்துக் காத்திட ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் பெரிய பெரிய தமிழ் மொழிச் செல்வங்கள், தமிழினப் பெருமை கூறும் வரலாறுகள், சமய தத்துவங்கள், அரசியல் கொள்கைகள், கலைகள், அறிவியல்கள்… அழிகின்றன என்கின்ற போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலக்கண நூல்களும், உரை நூல்களும் அழிய நேரிட்டது வியப்பில்லை.

    சிலப்பதிகாரத்துக்கு ‘அடியார்க்கு நல்லார்’ என்பவர் எழுதிய உரை (Commentary to the Great Epic, The CILAPPATHIKAARAM written by the great scholar Adiyaarkku Nallaar) தமிழர்களின் பொறுப்புணர்ச்சி யின்மையால் பெருமளவு அழிந்து விட்டது. தொல்காப்பியத்துக்குச் சங்க காலத்தில் எழுதப்பட்ட உரைநூல்களும்; பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் அமராவதி ஆற்றங்கரை கருவூறார் அவர்களின் முயற்சியால் (கி.மு.100 முதல் கி.பி. 900 வரை) பல உரைநடை நூல்கள் எழுந்தன. ஆனால், அவை பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் தோற்றுவித்த பன்னாட்டுப் பன்னோக்குப் பல்கலைக் கழகத்திற்குக் கிடைத்ததா’ இல்லையா’ என்பது தெரியவில்லை. ஆனால், இவர் தமிழ்மொழியையும், தமிழினத்தையும், தமிழ்நாட்டையும் காக்கத் தெய்வீகப் பேரரசாகப் பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கினார். (His Holiness the Siddhar Kaaviri Aatrangkarai Karuvuraar created the Later Chola Empire 785 A.D. - 1279 A.D. as the DIVINE EMPIRE or The Holy Empire to protect and to take care of the Sacred Tamils, Tamilians and Tamilnadu) ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் இப்பேரரசு தமிழ் காக்கவும் வளர்க்கவும் பாடுபடவில்லை.* (* “இன்றைக்குக் கூட அரசியல்வாதிகள் தங்களுக்குப் புகழ் சேர்க்கவும், ஆள் சேர்க்கவும், ஆதரவு தேடவும் மட்டுமே “தமிழ் வாழ்க” என்று போலியாகக் கூக்குரல் எழுப்புகின்றனர். எந்த ஓர் அரசியல்வாதியோ, அரசியல் இயக்கமோ தமிழறிஞர்களைக் கூட்டித் தமிழ்மொழியைக் காக்கவும், வளர்க்கவும், வளப்படுத்தவும், ஆட்சிமை பெறச் செய்யவும் தேவையான திட்டங்களைத் தயாரிக்கவே இல்லை. துமிழே சரியாகத் தெரியாத, புரியாத அரசியல் கூலிகளும், போலிகளும் தமிழ் மொழியின் பெயரால் கேலிக் கூத்தடித்துக் கொள்ளை இலாபமே சம்பாதிக்கிறார்கள்….” என்று என் தந்தை சித்தர் காகபுசுண்டர் ம.பழனிச்சாமி அவர்கள் அடிக்கடி கூறியதையும் எழுதியதையுமே இங்கே நினைத்துப் பார்க்கிறேன். என் தந்தை கடுமையாக விமரிசித்திருப்பது போலல்லாமல் இப்போதெல்லாம் ஆட்சியாளர்கள் ஓரளவாவது தமிழுக்குப் பெயரளவில் தொண்டு செய்கிறார்கள் என்பதே எனது கருத்து. ஆனால் என்னைப்போல் எண்ணற்றோர் பாதுகாக்க முடியாமல் பழம்பெரும் தமிழ்நூல்களை அழிய விடுகிறார்கள் என்பது மட்டும் உண்மையே. அதற்கு உண்மையான தமிழ் அறிவும், தமிழ் உணர்வும், தமிழ்ப் பற்றும் உடையவர்கள் தமிழினச் சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கியத் துறைகளில் தலைவர்களாக வரவேண்டும்!…. அப்பொழுதுதான், தமிழ்மொழிக்கும், தமிழ் இனத்துக்கும், தமிழ் நாட்டுக்கும் உருப்படியான நன்மைகள் உண்டாகும்.)

    எனவேதான், அவர் தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், பாதுகாக்கவும், செழிப்புக்காகவும் பழம்பெரும் நூல்களை நகலெடுக்கவும், தொகுத்து வைக்கவும், உரையெழுதி விளக்கம் பெறச் செய்யவும், புதிய நூல்கள் பிறந்திடவும், அனைத்துக் கலைகளையும், அறிவியல்களையும் தமிழ்மொழியில் வளர்க்கவும் திட்டமிட்டுத் தஞ்சைப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார். அதன் பயனாகத்தான் ‘நச்சினார்க்கினியர்’ என்பவர் ‘தொல்காப்பியத்துக்கு உரை’ எழுதியதுடன் ‘பத்துப்பாட்டு’, ‘கலித்தொகை’, ‘சிந்தாமணி’ முதலிய நூல்களுக்கும் உரையெழுதினார். இவர், வேறு என்னென்ன நூல்களுக்கு உரையெழுதினார் என்பது தெரியவில்லை. இவரைப் போலவே ‘தொல்காப்பியத்துக்கு உரை’ எழுதிய ‘பேராசிரியர்’ என்பவர் ‘குறுந்தொகை’ ‘திருக்கோவையார்’ முதலியவைகளுக்கு உரையெழுதி யிருக்கிறார். இவர் எழுதிய வேறு உரை நூல்கள் பற்றித் தெரியவில்லை. இவர்களன்றி ‘இளம்பூரணர்’, ‘சேனாவரையர்’ என்ற இருவரும் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பெரும்புலவர்கள் என அறிய முடிகின்றது. மற்ற எவர் பற்றியும் தெரியாமல் போனமைக்குத் தமிழரின் மொழியைப் பேணத் தெரியாத அப்பாவித் தனம்தான் காரணம். தொல்காப்பிய உரையாசிரியர்களாகக் கல்லாடர், தெய்வச்சிலையர் என்போரும் குறிக்கப்படும் சிறப்புடையவர்களே.

    தொல்காப்பியத்துக்கு அடுத்துத் தோன்றிய மிகப்பெரிய இலக்கண நூலான ‘நன்னூலுக்கு’ மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், ஆறுமுக நாவலர், சிவஞான முனிவர் போன்றோர் எழுதிய உரைகள் தமிழ் ‘உரைநடை’ வளமாக இருந்துவந்த பேருண்மையை விளக்குகின்றன.

    தமிழர் வேதம் எனப்படும் ‘திருக்குறளுக்கு’ அன்று தொட்டு இன்று வரை கணக்கற்றோர் உரை எழுதியுள்ளனர். அவையெல்லாம் ‘தமிழ்மொழியில் உரைநடை பிற்காலத்தில் மேனாட்டார் தொடர்பால்தான் தோன்றியது’ என்பது தவறான, கேலிக்குரிய, அறியாமை மிக்க, அற்பக் கருத்தை மறுத்திடப் பேருதவி புரிகின்றன.

    தமிழில் வடமொழியாளர்களும் தமிழரின் சமயத் தத்துவங்களைப் புரிந்து கொள்ளும்படி ‘மணிப்பிரவாள நடை’ என்றோர் புதிய ‘தமிழும் சமசுக்கிருதமும் கலந்த உரைநடையைத் தோற்றுவித்து வளர்த்த பெருமை ‘திருவாய் மொழி’ எனும் நூலுக்கு ‘திருக்குகைப் பிள்ளான்’ எழுதிய ‘ஆறாயிரப்படி’ எனும் உரைக்கும், நம்சீயர் எழுதிய ‘ஒன்பதினாயிரப்படி’ எனும் உரைக்கும், ‘அழகிய மணவாள சீயர்’ எழுதிய ‘பன்னீராயிரப்படி’ எனும் உரைக்கும், ‘பெரியவாச்சான்பிள்ளை’ எழுதிய ‘இருபத்துநாலாயிரப்படி’ எனும் உரைக்கும் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதிய ‘முப்பதினாயிரப்படி’ எனும் உரைக்கும், சிவஞானபோதம் எனும் நூலுக்குச் சிவஞானமுனிவர் எழுதிய ‘மாபாடியம்’ என்ற உரைக்கும் உண்டு. அதாவது, தமிழில் உரைநடை எழுதியவர்கள் பிறருக்குத் தங்களின் கருத்தை விளக்கும் பெருமுயற்சியில் ‘பலவகை நடை’யைக் (different dictions or styles) கையாண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதனால், தமிழ் மொழியில் உரைநடை தொன்று தொட்டு வருகிறது என்பதும், காலங்கள் தோறும் உரைநடை நூல்கள் தோன்றியிருக்கின்றன என்பதும் விளங்குகிறது, விளக்கப்படுகிறது.

    எனவே, தமிழர்கள் தாழ்வு நீங்கி உரிமை மிக்க பெருமித வாழ்வு வாழ வேண்டுமென்றால் தமிழ் இலக்கியங்கள் காக்கப் படுவதும், வளர்க்கப் படுவதும், வளமூட்டப் படுவதும், சிறப்பிக்கப் படுவதும் மிகமிக இன்றியமையாததாகும். இதனைத்தான், பதினெண் சித்தர் பீடாதிபதிகள்

    …. என்று “கருவாசகம்” எனும் நூலாக உருவாக்கினர். ‘கருவாக்கு’, ‘கருவாசகம்’, ‘குருவாக்கு’, ‘குருவாசகம்’, ‘அருள்வாக்கு’, ‘அருள்வாசகம்’, ‘மருள் வாக்கு’, ‘மருள்வாசகம்’ எனும் பத்து வகைப்பட்ட நூல்களிலும் தமிழரை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து தட்டியெழுப்பிடும் கருத்துக்களே விளக்கப் பட்டிருக்கின்றன. இந்த நூல்கள் எல்லாத் தமிழர்களுக்கும் கிடைத்தால் தமிழினத்தின் மிடிமை வாழ்வும், அடிமை வாழ்வும் முடிவுக்கு வரும். தமிழரின் இருண்ட வாழ்வுக்கு விடிவு ஏற்படும்…. ஆனால்!!! … அந்தோ!!!….. பரிதாபம்….. இந்த நூல்கள் எந்நிலையில் இருக்கின்றனவோ!’!’!’ ….

    காலப்போக்கில் தமிழர்கள் மொழியுணர்வையும், அறிவையும், பற்றையும், பாசத்தையும், பிடிப்பையும், நம்பிக்கையையும், ஆர்வத்தையும், ஈடுபாட்டையும்… இழக்கலாயினர். அதனால், தமிழரின அரசு, சமயம், சமுதாயம், கலை, தொழில், அகவாழ்வுக்குரிய பண்பாடு, புறவாழ்வுக்குரிய நாகரீகம்…. முதலிய அனைத்தும் சீரிழந்து சிதைந்து நலியலாயின. நல்ல காலமாகக் கிறித்துவ சமயத்தைப் பரப்பிட வந்த பாதிரியார்கள் “தமிழைக் கற்றால்தான் தமிழரை மதமாற்றம் செய்ய முடியும்” என்ற பேருண்மையை உணர்ந்தனர். அதனால் கிறித்துவ சமய போதகர்கள் தமிழ்மொழி போதகர்களாக மாறினார்கள். அதனால் ‘இராபர்ட்டி நொபிலி’ என்ற போதகர் ‘ஞான உபதேச காண்டம்’, ‘மந்திர மாலை’, ‘ஆத்தும நிர்ணயம்’, ‘தத்துவக் கண்ணாடி’, ‘ஏசுநாதர் சரித்திரம்’, ‘ஞான தீபிகை’, ‘நீதிச் சொல்’ முதலிய பல உரைநடை நூல்களை எழுதினார்.

    ‘கான்ச்டாண்டியன் ஜோசப் பெஸ்கி’ எனும் ‘வீரமாமுனிவர்’ (கி.பி.1700இல் தமிழ்நாடு வந்தவர்) என்பவர் தமிழ் மொழி எழுத்துக்களில் எகர ஏகாரங்களுக்கும், ஒகர ஓகாரங்களுக்கும் தெளிவான வடிவமைப்பு வேறுபாட்டை உருவாக்கிக் கொடுத்தார். முதன் முதலில் தமிழ் மொழியில் ‘சதுரகராதி’ என்றோர் அகராதியை வெளியிட்டார். தமிழில் உள்ள புராண இதிகாசங்களுக்குச் சமமாக ஏசுநாத பெருமானின் வளர்ப்புத் தந்தையான சூசையப்பரின் வரலாற்றைத் தேம்பாவணி எனும் காப்பியமாக எழுதினார். இது மட்டுமின்றித் ‘திருக்காவலூர்க் கலம்பகம்’, ‘கித்தேரி அம்மை அம்மானை’, ‘அடைக்கல மாலை’, ‘தமிழ்ச் செய்யுள் தொகை’, ‘தொன்னூல் விளக்கம்’, ‘பரமார்த்த குரு கதை’, … எனும் நூல்களை எழுதினார்.

    சீகன் பால்கு ஐயர்: செர்மானிய நாட்டவர் இவர். 1706ªல் தரங்கம்பாடி வந்தார். இவர் ‘புரோட்டஸ்டாண்ட்’ எனும் கிறித்துவ மதப்பிரிவின் முதல் குரு. இவரே முதன் முதலாகத் தமிழ் நூல்களை அச்சிட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார். ‘தமிழ் மொழியின் மூலம்தான் தமிழரை வெல்ல முடியும்’ என்பதை உணர்ந்து பெரும்பாலான தமிழர்களை விட அதிகத் தமிழ்ப் பற்றும் ஆர்வமும் கொண்டு விளங்கினார். கிறித்தவ வேதமான ‘பைபிளை’த் தமிழில் எழுதினார். ‘தமிழ் மொழிக்கும் இலத்தீன் மொழிக்கும் ஏற்படக் கூடிய உறவுதான் மதமறுமலர்ச்சிக்கும் அல்லது மதம் பரப்பும் பணிக்கும் வேர்’ என்ற கருத்தை உணர்ந்து ‘தமிழ் இலத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு’ என்னும் நூல் எழுதினார்.

    எல்லீஸ் துரை: இவர், ‘தமிழர்கள் தமிழை மறந்ததால் துறந்ததால் மாபெரும் வீழ்ச்சியை அடைந்து நிலையான தாழ்ச்சியைப் பெற்று விட்டனர்’ என்ற பேருண்மையை உணர்ந்தார். ‘எப்படியும் தமிழர்களை ஒற்றுமைப் படுத்த, விழிச்சியைப் பெறச் செய்ய, எழுச்சியுறச் செய்யத் தமிழ் மொழியை வளப்படுத்தி வளர்த்திட்டால்தான் முடியும். அதற்கு தமிழ் இலக்கியங்களை அழியாமல் காத்திடல் வேண்டும்’ என்ற பேருண்மையை நன்குணர்ந்தார். வாய்கிழியத் “தமிழ் வாழ்க” என்று கூக்குரலிடும் தமிழினப் போலிகளையும் கூலிகளையும் விட ஆயிரமாயிரம் மடங்கு “உண்மையான தமிழ்த் தொண்டை”த் துவக்கினார். திரு. முத்துச்சாமி பிள்ளை என்பவரின் துணை கொண்டு பழம்பெரும் தமிழ் ஏடுகளை யெல்லாம் ஒன்று திரட்டித் தொகுத்தார். அவற்றின் பின்னணியில் வீரமாமுனிவரின் வரலாற்றையும் எழுதினார். அதாவது “தமிழறிஞர்களைப் போற்றுவதே தமிழை வளர்ப்பது! தமிழை வளர்ப்பதே தமிழரைக் காப்பது!” என்ற பேருண்மையைச் செயலாக்கினார். இவரே, திருக்குறளில் உள்ள முதல் பதின்மூன்று அதிகாரங்களுக்கு ஆங்கிலத்தில் விளக்க உரை எழுதினார். அதற்கு மேல் செயல்பட இயற்கை அநுமதிக்க வில்லை.

    இரேனியஸ் ஐயர்: இவர், திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் தங்கிச் சமயப் பணி புரிந்த மேனாட்டார். இவர், ‘மக்கள் பேசும் எளிய தமிழ் உரைநடையின் மூலம்தான் மதப் பணியைச் சிறப்பாக ஆற்ற முடியும்’ என்று கண்டறிந்தார். அதன்படியே, ‘வேத உதாரணத் திரட்டு’ எனும் உரைநடை நூலை எழுதினார். பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் உரைநடை நூல்களை மிகுதியாக எழுதினார் என்பதையும், சித்தர் ஏளனம் பட்டியார் எனப்படும் கண்டப்பக் கோட்டைச் சித்தர் கருவூறார் இராமசாமி பிள்ளையும், எமது தந்தை சித்தர் காகபுசுண்டர் ம.பழனிச்சாமி பிள்ளையும் மிகுந்த உரைநடை நூல்களையும் எழுதினார்கள் என்பதையும்; எம் தந்தை ‘கூடுமானவரை யாம் கவிதையே எழுதக் கூடாது; அனைத்தையும் உரைநடையில்தான் எழுத வேண்டும்’ என்று ஆணையிட்டுச் சென்றுள்ளதையும் ஈண்டு குறிப்பது பொருத்தமானதாகும்.

    டாக்டர் G.U. போப்:- இவர் ‘ஆக்ஸ்போர்டு’ பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த பெருமானார் ஆவார். துமிழராய்ப் பிறந்தவர்களில் கோடியில் ஒருவருக்குக் கூட இல்லாத அளவு எல்லையற்ற தமிழ்ப்பற்றும், உணர்வும், ஈடுபாடும், வெறியும் பெற்றிருந்தார் இவர். தமிழினத் தலைவர்களில் எவருக்கும் இதுவரை ஏற்படாத தமிழ்ப் பற்றும், உணர்வும், ஈடுபாடும், வெறியும் அன்னியரான இவருக்கு இருந்தது என்று கூறினால் அது மிகையாகாது. ஏனெனில், இவரைப் போன்று தமிழ் மொழியை விரும்பும் ஒரே ஒரு தலைவன் தோன்றியிருந்தால் கூட இந்நேரம் ‘தமிழ்மொழி’, ‘தமிழினம்’, ‘தமிழ்நாடு’ எனு மூன்றும் உரிமை வாழ்வு பெற்று உயர்ந்திருக்கும். ஆனால், அதுதான் நடக்க முடியாதபடிப் போலிகளும், கூலிகளும், அரைகுறைகளும், தன்னல வெறியர்களும், தரமற்றவர்களும், உரமற்றவர்களும், திறமற்றவர்களும், தீரமற்றவர்களும், வீரமற்றவர்களுமே…. தமிழினத்தின் தலைவர்களாக வரக் கூடிய வாய்ப்பு இருந்து வருகிறது! இதற்கென்ன செய்வது!

    G. U. போப் அவர்கள் திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அத்துடன், நாலடியார், புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை முதலியவற்றில் சிலசில பாடல்கள் மொழிபெயர்த்திட்டார்.

    இவர் தம் கல்லறையில் “தாழ்மையுள்ள தமிழ் மாணவன்” என்று எழுதி வைக்கச் சொல்லி இறந்தார். இந்த அளவு தமிழ்மொழியிடம் பற்றும், பாசமும், அன்பும், அக்கரையும், ஆர்வமும், பிடிப்பும்….. உள்ள தமிழன் கோடியில் ஒருவராவது தோன்றியிருப்பின் என்றோ தமிழும், தமிழினமும், தமிழ்நாடும் உய்ந்திருக்கும். இம்மாபெரும் தமிழ்த் தொண்டர் சாயாபுரத்தில் சமயப்பணி ஆற்றினார். இவர் பெயரால் கல்லூரி ஒன்று நடைபெறுகிறது அங்கே.

    கால்டுவெல் ஐயர்:- இவர் 1889இல் அயர்லாந்து நாட்டில் இருந்து சமயப்பணி ஆற்ற வந்தவர். திருநெல்வேலி மாவட்டத்து ‘இடையன்குடி’யில் தங்கித் தமிழ்ப் பணியும், சமயப் பணியும் ஆற்றி வந்தார். இவர் ‘திருநெல்வேலி வரலாறு’ என்று ஒரு நூல் எழுதினார். இவரே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்ண்டம், துளு முதலிய அனைத்து மொழிகளையும் ஆராய்ந்து ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்கிற மாபெரும் ஆராய்ச்சி நூலை எழுதினார். இதன் மூலம் மேலே குறிப்பிட்ட எல்லா மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவையே என்ற கருத்தை நிலை நாட்டினார். அத்துடன் அனைத்து மொழிகளுக்கும் தமிழே தாய்மொழி என்ற பேருண்மையையும் உலகம் ஒப்புக் கொள்ளுமாறு உணர்த்தினார். இது போன்ற தொண்டினைச் செய்யும் தமிழறிஞர் யாராவது ஒருவர் எப்பொழுதாவது தோன்றி வந்துவிட்டால் கூடத் தமிழொழி, தமிழ் இனம், தமிழ் நாடு உய்வு பெற்றிருக்கும்.

    இப்படிக் கடல் கடந்து வந்த மேலை நாட்டினர்கள் தமிழ் மொழியை வளப்படுத்தினால்தான் தாங்களும் தங்களது கொள்கைகளும் வளர முடியும், வலிமை பெற முடியும், நிலைத்த வாழ்வு பெற முடியும் என்று உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால், இன்றுவரை, தமிழின் பெயரைச் சொல்லிக் கொண்டு பொருளும், புகழும், பதவியும் தேடிக் கொண்ட அரசியல் வாதிகள் தமிழை வாழவைத்தால்தான் அல்லது வளர்த்தால்தான் அல்லது செழிப்படையச் செய்தால்தான் தங்களது கொள்கைகளும், குறிக்கோள்களும் வாழ முடியும், வளர்ச்சியடைய முடியும், வளப்பட முடியும், செழிச்சியடைய முடியும் என்ற பேருண்மையை உணர மறக்கிறார்கள், செயலாக்க மறுக்கிறார்கள். இதற்கென்ன செய்வது’ தமிழ்த் தொண்டாற்றிய மேனாட்டு நல்லறிஞர்களின் வரலாறுகளை சொல்லிக் காட்டுவதின் மூலமாவது அவர்களைத் திருத்த முடியாதா என்று எண்ணுகிறோம் எம்மைப் போன்றோர்.

    தமிழ் உரைநடை வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றது. பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தமிழ் உரைநடையை வளர்த்ததன் மூலமே சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கியத் துறைகள் அனைத்துக்கும் நிலையான வடிவும், வாழ்வும், வளமும், வலிவும், பொலிவும் ஊட்டினார்கள். அவர்கள் வழியிலே எல்லா வகையான சித்தர்களும் தமிழ் மொழிக்குத் தொண்டாற்றி யுள்ளனர். சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் ஆக வாழ்ந்த சித்தர் ஏளனம்பட்டியார் இலக்கியப் பணியாற்றினார். இவரது சம காலத்தவராகத் தமிழ்ப் பணியாற்றியவர்கள் வடலூர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருட்கொடை வள்ளல் இராமலிங்க அடிகளார் அவர்கள், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர், திரு சி.வை. தாமோதரம் பிள்ளை, திரு உ.வே. சாமிநாத ஐயரவர்கள், மறைமலையடிகள், திரு வி. க. முதலியாரவர்கள்;

    இவர்களேயன்றி இலைமறை காயாக இருந்து தமிழ் காத்தும் வளர்த்தும் செயல்பட்டவர்கள் முடிகண்ட சோழபுரத்து காகபுசுண்டர் பாரம்பரியத்தினரும், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் பரம்பரையினருமாவார்கள். குறிப்பாக எம் தந்தை ஆங்கிலமும் தமிழும் கைவந்தவர் என்பதால் இருமொழிப் புலமையில் மிகச் சிறந்த தமிழ் காப்புப் பணி, வளர்ப்புப் பணி, செழிப்புப் பணி…. முதலியவைகளைச் செய்திட்டார். அவரைத் தொடர்ந்து செயலாற்றிடவே எம்மைப் பகுத்தறிவுப் போக்கும், பொதுவுடமைத் தத்துவப் பிடிப்பும் மாறாது செயல்படும் தமிழ்த் தொண்டனாக உருவாக்கினார்.

    யாம் கற்றவை, நோற்றவை, உற்றவை, பெற்றவை, … முதலியவை அனைத்தும் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு எனும் மூன்றையும் வரலாற்றுப் பின்னணியோடு வடிவப் படுத்தி வலிமைப் படுத்தி வளப்படுத்தி வளர்த்துக் காக்கவே பயன்படுத்தப் படுகின்றன. யாம் ஒரு மாபெரும் உண்மையான உலக வரலாறாக வாழ்ந்து வளர்ந்து செயல்பட்டு வருகிறோம். எமது ஒவ்வொரு சொல்லும், எழுத்தும் ஓர் அடியானை உருவாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றது. அதனால், யாம் எழுதியுள்ள நூற்றுக் கணக்கான நூல்களையும், ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும், நூறாயிரக் கணக்கான அஞ்சல்களையும் விட எண்ணிடற்கரிய சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், சித்தர் நெறி ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் உருவாகி விட்டார்கள்.

    எனவே, இனிமேல் நானே நினைத்தாலும் கூட சமுதாய மாற்றத்தை உண்டாக்கிட போர்க் கோலம் பூணப் போகிறவர்களைத் தடுக்கவே முடியாது. மீண்டும் அருட்சேனைகள் திரண்டு பாரதப் போரை நிகழ்த்தியே தீரும். அதன் வெற்றியால் சித்தர்கள் குறிக்கும் ‘சமத்துவத் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப்பட்டே தீரும். யாம் பசித்திருந்தும், தனித்திருந்தும், விழித்திருந்தும், சிந்தித்திருந்தும், பொறுத்திருந்தும் தெரிந்து கொண்டவை ஏராளம்! ஏராளம்!! ஏராளம்!!! ஆனால், அவை எம்மால் அறிய, ஆராய, புரிய, உணர, தெளிய, ஒப்புக் கொள்ளப் படக் காலதாமதம் ஆகிவிட்டது.

    எனவேதான், யாம், எம்மால் உருவாக்கப் பட்டவர்களை அதிகம் கட்டுப் படுத்தாமல் அவரவர் ஆர்வத்துக்கும், ஆற்றலுக்கும் ஏற்பச் சிந்தித்துப் பலருடன் கலந்து முடிவெடுத்துச் செயல்பட அனுமதித்துள்ளோம். அனைவருமே அன்பு, அமைதி, நிம்மதி, உறவு, நட்பு, மகிழ்வு, மானுட உணர்வு, ஒற்றுமை, …. முதலிய சொற்களுக்குரிய பொருளை விரும்புகிறவர்களாக, நம்புகிறவர்களாக, போற்றிப் பேணி வளர்ப்பவர்களாக உருவாக்கப் பட்டுள்ளார்கள் எம்மால். எனவே, எந்தப் புரட்சி நடந்தாலும் அது பண்பாடும், நாகரீகமும் கெடாமல் பாதுகாப்பதாகவே நிகழும் என்று உறுதியைக் கூறி என்னுடைய இந்த முன்னுரையை நிறைவு செய்கிறோம் யாம். அச்சேறாமல் கையெழுத்துப் பிறதிகளாக எமது இலக்கியங்கள் வாழ்ந்தாலும் அவை விரைந்தும், விரிந்தும் சுற்றுலா வருகின்றன என்ற நிறைவிலேயே தொடர்ந்து எழுத்துப் பணியாற்றுகிறோம் யாம்.

    “சமுதாய மாற்றமே சகல ஏமாற்றங்களையும் அகற்றும்”

    “சமய மலர்ச்சியே சமுதாய மாற்றம்”

    “தமிழ்மொழிச் செழிச்சியே சமய மறுமலர்ச்சி”

    “தமிழின விழிச்சியே தமிழ் செழிச்சி”

    அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!

    தனிப்பெருங் கருணை! அருட்பெருஞ்சோதி!

    எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே

    எல்லாம் வல்லான் தனையே ஏத்து

    ஓம் திருச்சிற்றம்பலம்

    ஞாலகுரு, ஞானகுரு
    குருமகா சன்னிதானம் சித்தர் கருவூறார்
    பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி
    14/3/1982

    தொடர்புடையவை: