Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி>
  • அருளாட்சி ஆணைகள்.>
  • அருளாட்சி ஆணைகள் - ஆணை 17
  • அருளாட்சி ஆணைகள் - ஆணை 17

    அருளாட்சி ஆணைகள் - ஆணை 17

    பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் 17வது ஆணை

    பிறாமணர்களின் சாதுரியமும், அதனை வெல்ல வேண்டிய விதமும்

    பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியர்கள் நுட்பமான திட்டமிட்ட சூழ்ச்சிகளால் தமிழர்களை வீழ்த்தித் தாழ்த்திச் சுரண்டுகிறார்கள், அடிமைப் படுத்தி யிருக்கிறார்கள், ஒற்றுமை யிழந்து நிற்குமாறு செய்திருக்கிறார்கள். ஆனால், சீனர்களோடும், யவனர்களோடும், சோனகர்களோடும், வடபுலத்தார்களோடும், புத்த மதத்தார்களோடும், சமண மதத்தார்களோடும் மிகமிகச் சாதுரியமாக நட்போடும், தோழமையோடும் பழகி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

    இன்னும் சொல்லப் போனால் இந்தப் பிறாமணர்கள் தமிழர்களை என்றென்றும் இனப்பற்றோ, மொழிப் பற்றோ, நாட்டுப் பற்றோ, ஒற்றுமை யுணர்வோ தோன்றாதபடி பல பிரிவினர்களாகப் பிரித்து ஒருவரோடு ஒருவர் வேறுபட்டும், மாறுபட்டும், சண்டை சச்சரவுகளையும், போர்களையும் நிகழ்த்திக் கொண்டே யிருக்குமாறு செய்துள்ள சதிகளுக்குத் துணையாகவே எல்லாவித மாற்று மதத்தவர்களையும் தங்களுடைய நண்பர்களாகவும், தோழர்களாகவும் ஆக்கிக் கொண்டுள்ளார்கள்.

    அதாவது, வேற்று நாட்டவர்களோ, மாற்று மதத்தினர்களோ, தமிழர்களை தன்னுணர்வும், தன்மானப் பிடிப்பும், இன ஒற்றுமையும், மொழிப் பற்றும், சமய விழிச்சியும், சமுதாய எழுச்சியும், அரசியல் கிளர்ச்சியும் அடையுமாறு செய்திடாமல் இருக்க என்னென்ன முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டுமோ அந்தந்த முன்னேற்பாடுகளை எல்லாம் பிறாமண சமய சமுதாயத் தலைவர்களிலிருந்து சாதாரணக் கூத்தாடிப் பிச்சைக்காரப் பிறாமணன் வரை ஆர்வத்தோடு தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    இந்தப் பேருண்மையினை தமிழர்களில் அரசன் முதல் ஆண்டி வரை முறையாகவும் நிறையாகவும் புரிந்து தேவையான பொய்யான ஹிந்துமத மறுப்பு, விருப்பு, வெறுப்பு, எதிர்ப்பு, முறியடிப்பு….. முதலிய முயற்சிகளைக் குறைவில்லாமல் செய்யத் தொடங்க வேண்டும். இதற்காகவே பதினெண் சித்தர் பீடாதிபதியின் அருளாட்சி ஆணைப்படி உடனடியாகத் தமிழகத்திலுள்ள அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களையும், கருவறைகளையும், வெட்டவெளிக் கருவறைகளையும் மெய்யான இந்துமதப் படி குருதிப் பலியிட்டும், இறைச்சியுணவுப் படையலிட்டும், ஐந்தீ வேட்டல் முறைகளையும், முத்தீ ஓம்பலையும் பயன்படுத்திப் புத்துயிர்ப்புச் செய்ய வேண்டும்.

    தக்கவர்களைக் கொண்டு அனைத்து வகையான எழுந்தருளிகளையும், (ஞான உலாவில் எடுத்துச் செல்கின்ற அனைத்து வகையான சிலைகள்) உயிர்பெற்று எழச் செய்ய வேண்டும். இதற்காகக் கோயில் கட்டிடங்கள் அனைத்தையும் (இங்கு கோயில் என்ற சொல் அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களையும், கருவறைகளையும், வெட்டவெளிக் கருவறைகளையும் குறிக்கும்) செப்பனிட்டுப் புதுப்பித்துத் திருப்பணிகள் செய்ய வேண்டும். பூசைக்குரிய பூக்களையும், இலைகளையும் தரக் கூடிய நந்தவனங்களையும், எழுந்தருளிகளின் ஞான உலாவிற்கும், தவசிகள், ஞானிகள், மோனிகள், சித்தியாளர்கள்…. முதலியவர்களின் அருள்வாழ்விற்கும் பயன்படக் கூடிய சோலைகளையும் செழுமையாக வளர்த்துக் காத்திடல் வேண்டும். திருக்குளங்கள் தூய நன்னீர் நிறைந்தவைகளாக இருக்குமாறு செய்ய வேண்டும்.

    தேவையான அளவு புதிய புதிய மடங்களையும், பீடங்களையும், ஆதீனங்களையும், சன்னிதானங்களையும், குருகுலங்களையும் உருவாக்க வேண்டும். உடனடியாக மெய்யான இந்துமதத்தின் தத்துவ வித்துக்களாகவும், சித்தாந்த நாற்றுக்களாகவும் இருக்கின்ற அத்திற, சாத்திற, சூத்திற, தோத்திற, நேத்திற, வேத்திறங்களையும், சுருதி, ஆரண, ஆகம, மீமாம்சைகளும், நேம நியம நிடத நிட்டை நீதிகளையும், மந்திர, மந்திற, மந்தர, மாந்தர, மாந்தரீகங்களையும், தந்திற, தந்திர, தந்தர, தாந்தர, தாந்தரீகங்களையும், எந்திற, எந்திர, எந்தர, ஏந்தர, ஏந்தரீகங்களையும், தவ, பூசை, ஞானங்களையும், ஓம, ஓக, யாக, யக்ஞ, வேள்விகளையும், கொடிநிலை கந்தழி வள்ளிகளையும், பதினெட்டு வகையான வாக்கு வாக்கியம் வாசகங்களையும், ஓதங்களையும், தொண்ணூற்றியாறு போதங்களையும் மற்ற புராண இதிகாசங்களையும் நூல்களையும் விரிச்சிகளையும், ஓச்சுக்களையும், எள்ளல்களையும், ஏசல்களையும், அழுகைகளையும், தொழுகைகளையும், அரற்றல்களையும்…… தெளிவாக ஏடுகளில் எழுதித் தொகுத்திடல் வேண்டும். இவைகளைப் பயிற்றுவிக்க நாடெங்கும் பள்ளிகளையும், கலாசாலைகளையும், குருகுலங்களையும், கருகுலங்களையும், தருகுலங்களையும், திருகுலங்களையும் உருவாக்கி மெய்யான இந்துமதத்தை வளப்படுத்த வேண்டும், வலிமைப் படுத்த வேண்டும்.

    அதாவது தமிழ்நாட்டுக்குள் வாழப் போகும் தமிழர்கள் அனைவரும் தமிழ்மொழியில் நல்ல புலமையும், மெய்யான இந்துமதத்தில் முழுமையான பயிற்சி முதிர்ச்சியும் பெற்றிடுமாறு செய்திட்டால்தான், தமிழன் பிறருக்கு அடிமைப்பட மாட்டான். பிறரிடம் கூலியாகவோ, கங்காணியாகவோ செயல்பட மாட்டான். அன்னியர்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் அப்பாவியாகவோ ஏமாளியாகவோ கோமாளியாகவோ வாழ்ந்திட மாட்டான். எனவே, உடனடியாக மேற்படி அருட்கல்வித் திட்டத்தைச் செயலாக்கிட அரசாணைகள் வழங்கப் பட்டாக வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்ச் சமுதாயம் என்றைக்குமே கட்டுக் கோப்பைப் பெறாது. சமய சமுதாய பொதுச் சொத்துக்கள் அனைத்தும் வேற்று நாட்டார்களாலும், மாற்று மதத்தவர்களாலும் தொடர்ந்து கொள்ளை யடிக்கப் பட்டும்; சொந்தம் பாராட்டப் பட்டும்; சூறையாடப் பட்டிடும். என்றென்றும் தமிழர்களை அன்னியர்கள் ஆள நேரிட்டுத் தமிழர்கள் அனாதைகளாகவும், பஞ்சைகளாகவும், பராரிகளாகவும் வாழ நேரிட்டு விடும். இப்பேருண்மைகளைப் புரிந்தும் புரிய வைத்தும் செயல்படத் தயங்கும் அருள்மொழித் தேவனான (முதலாம்) இராசராசனோடு நேரடியான மோதலில் ஈடுபடுவதால் யாம் உருவாக்கிய அருட்பேரரசு எம்மாலேயே அழிய நேரிடும் என்பதை எண்ணியே யாம் தஞ்சைப் பெரிய கோயில் நிலவறைக்குள் நிறைகிறோம்.

    எமது அருளாட்சி அமைப்புப் பணி மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தமிழின எழிச்சி வரலாறாக அமைந்தாலும், அருள்மொழித் தேவனின் வட ஆரிய மாயையால் எனக்கு ஏற்பட்ட தோல்வியால் தமிழின எழுச்சி வீழ்ச்சியாகி விட்டது. ஆனால், இந்த வீழ்ச்சி உடனடியாக முழு அளவில் வெளிப்படையாகத் தெரிய வில்லை. இன்றைக்கு இமயம் முதல் குமரி வரையுள்ள இந்த மெய்யான இந்துமத அருட்பேரரசு காலப்போக்கில் இருந்த இடமே தெரியாமல் போய்விடும். இன்றைக்குப் பாராளும் பைந்தமிழினம் யாராலும் மீட்க முடியாத அடிமை வாழ்வைப் பெற்று மிடிமையுறும். அந்த வேதனைகளை யெல்லாம் எண்ணித்தான் ஞானவேந்தாக, நாளோலக்கத்திலும், திருவோலக்கத்திலும் அமரப் போகும் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதிக்குத் தேவையான பயனுள்ள செயல்திட்டமாக இந்தப் “பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகளை” மிகமிகத் தெளிவாக வழங்கிய பிறகே நிலவறைக்குள் செல்லுகிறோம் யாம்.

    இதன் விளைவுகளை உணர மாட்டாதவனாக இருக்கிறான் அருள்மொழித்தேவன். ஆனால், இவன் என்றாவது ஒருநாள் தன்னுடைய அப்பனையும், தாத்தாவையும், சிய்யானையும், பாட்டனையும், பூட்டனையும், ஓட்டனையும், சேட்டனையும், தேட்டனையும் …. நீள நினைத்துப் பார்ப்பானேயானால் தனது தவறுகளுக்காகத் தன்னையே பலியிட்டுக் கொள்வான். இவனுக்குத் தற்கொலை தவிர வேறு முடிவில்லை எனக் கூறியே மோன நிலையில் ஞான தவத்திற்காக நிலவறைக்குள் செல்லுகிறோம் யாம்.

    தொடர்புடையவை: