Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்>
  • மொழிவெறி பற்றிய கருத்து.
  • மொழிவெறி பற்றிய கருத்து.

    மொழிவெறி பற்றிய கருத்து.

    கேள்வி:- இன்றுள்ள நமது மதத் தலைவர்களில் சிலர் மொழி வெறி கூடாது. மதம், பத்தி முதலியவை மொழி வெறிக்கு அப்பாற்பட்டவையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இது பற்றி தங்கள் கருத்து என்ன?

    பதில்:- இது மாபெரும் தவறான கருத்து. இது தற்கொலைக்குச் சமமான கருத்து. மொழிதான் அருளுலகில் விழியாக, வழியாக, வழித்துணையாக, வழிகாட்டியாக, வழிப்பயனாக இருக்கின்றது. அந்தந்த மொழியில்தான் அந்த மொழியில் வாழ்ந்து மாண்டு தெய்வங்களாக, கடவுள்களாக, ஆண்டவர்களாக, பட்டவர்களாக, தேவர்களாக, தேவதைகளாக…. வாழும் அனைத்து வகையினருடனும் தொடர்பு கொள்ள முடியும்.

    குறிப்பு:- இறப்புக்குப் பின் அருவமாக, அருவுருவமாக, உருவமாக வாழுபவர்கள் மனிதர்களாக வாழும் பொழுது என்னென்ன மொழிகளை கற்றிருந்தார்களோ அதே மொழியறிவினைத்தான் பெற்றிருப்பார்கள். இதுதான் உண்மை! உண்மை!! உண்மை!!! இதன் அடிப்படையில்தான் பதினெண்சித்தர்கள் தங்களுடைய பூசாவிதி வாசகங்களையும் நெறிமுறைகளையும் விதிகளையும்…. உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்துத்தான் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

    அண்டபேரண்டங்கள், பிண்டங்கள், பயிரினங்கள், உயிரினங்கள் முதலிய அனைத்தையும் இணைக்கக் கூடிய அடிப்படை ஒலிகள் அனைத்தும் எழுத்து வடிவம் பெற்றதுதான் பதினெண் சித்தர்களின் தாய்மொழியான தமிழ். அதுவே இம்மண்ணுலகின் முதல் மொழி, மூலமொழி, அருளுலக பூசைமொழி.

    கேள்வி:- சிலர் மதமென்பது இனம், நாடு, மொழி…. முதலிய அனைத்தையும் கடந்தது என்று கூறுகிறார்களே, தங்கள் கருத்து என்ன?

    பதில்:- இது ஒரு மாபெரும் ஏமாற்றுக் கருத்து, சூழ்ச்சிக் கருத்து, சுரண்டல் கருத்து, வயிற்றுப் பிழைப்புக் கருத்து. தங்களுக்கென்று நாடு இல்லாத நாடோடிகளின் கருத்து. ஏனெனில், பதினெண் சித்தர்கள் ஒரு இனத்தின் பண்பாடு, நாகரிகம், வரலாறு முதலிய அனைத்தையும் முறையாகவும், நெறியாகவும் விளக்குவதும், வளப்படுத்தி வலிமைப்படுத்தி பொலிவு படுத்துவதும் மதம்தான். மதத்தால்தான் மொழிப்பற்று, இனப்பற்று, இன ஒற்றுமை, நாட்டுப் பற்று, நாட்டு உரிமை, சமுதாய விடுதலை, பொருளாதாரச் சமத்துவம், வீழ்ச்சிகளை வீழ்த்தும் புரட்சிநிலை…. முதலியவைகளை எல்லாம் உருவாக்க முடியும் என்று மிகத் தெளிவாகக் கூறுகின்றனர் பதினெண் சித்தர்கள்.