Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • ஆதிசங்கரர் வரலாறு>
  • ஆதிசங்கரர் - குருபாரம்பரியச் செய்தி.
  • ஆதிசங்கரர் - குருபாரம்பரியச் செய்தி.

    ஆதிசங்கரர் - குருபாரம்பரியச் செய்தி.

    திருமாளிகைத் தேவர் குருபாரம்பரியத்தில் இருந்து காலடி ஆதிசங்கரர் பற்றிய செய்திகள்

    “….. என் தாத்தா பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி தன் காலத்தில் தோன்றிய தேவகுமாரப் பதிலி; சமயக் குரவர் சீர்காழித் திருஞான சம்பந்தரின் மறுபிறப்பு; கருவறை ஊழியம் புரியும் சிவாச்சாரியார் மரபுக் கொழுந்து; ஆலமர் கடவுட் புதல்வன் முருகனின் அருட் தோன்றல்; கருணீக்கச் சைவ வேளாள மரபின் குல விளக்கு; சேரநாட்டுக் காலடி சங்கராச்சாரியார் பிறப்பெடுத்ததை வானியலால் உணர்ந்து, உரிய காலத்தில் சென்று உரிய வண்ணம் அருளையும் அருளுரையையும் அருளார்ந்த அறிவுரையையும் தேவையான அருளூறு பூசைமொழிகளையும், பூசை வழிவகைகளையும் வாரிவாரி வழங்கித் தயாரித்தார்.

    அப்படி அவரால் தயாரிக்கப் பட்ட தாந்தரீகச் சித்தியாளன், மாந்தரீக வல்லி, வெள்ளாடை மேனியன், உச்சிக் குடுமியான், ஆதிசங்கராச்சாரியார் சமசுக்கிருத மொழியில் புலமை பெற்று இமயம் முதல் குமரி வரை சுற்றி வந்து பிறாமணர்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டிட்டார்.

    ஆனால், சூழ்ச்சித் திறனும், நயவஞ்சகமும், குள்ளநரிப் பண்பும், எதையும் செய்யும் தரங்கெட்ட போக்கும் உடைய பிறாமணர்கள் தென்பாண்டித் தமிழனான ஆதிசங்கரனையே பிறாமணன் என்றும் சிவபெருமானின் வடிவம் என்றும், பெண்ணின்பத்தை மறுக்கும் துவராடைத் துறவி என்றும், மொட்டையடித்துக் கொட்டை கட்டிய பிறாமணச் சாமியார் என்றும் கதை கட்டிவிட்டு வெற்றி பெற்று விட்டார்கள்.

    நான்கு யுகங்களாகப் பதினெண்சித்தர்கள் இந்தியாவுக்குள் உண்டாக்கிய மடங்களுக்குள் அடங்கும் பத்ரிநாத், துவாரகை, பூரி, சிருங்கேரி மடங்களில் புத்துயிர்ப்புப் பணியைச் செய்த ஆதிசங்கராச்சாரியாரின் மெய்யான வரலாற்றுச் செய்தியினையே அடியோடு மாற்றி; அவர்தான் மேற்படி நான்கு மடங்களையும் வட ஆரிய வேதமதத்திற்காக உண்டாக்கினார் என்று கதைகட்டி விட்டார்கள். இந்தக் கதையையும் தமிழர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

    இவையெல்லாம் விட வேதனையானதும் வியப்பானதும் புரிந்து கொள்ளவே முடியாத ஒன்றானதும் ஆன ஒரு செய்தி உண்டென்றால்; அது தமிழர்கள் அனைவரும் மேற்படி நான்கு மடங்களிலிருந்தும் சுற்றுப் பயணம் வரும் சங்கராச்சாரியாரின் மடாதிபதிகளைத் தங்களுடைய குருவாகவே ஏற்றுக் கொண்டு விட்டதுதான். அதாவது, தமிழனுக்குக் குரு தமிழனாகத்தான் இருக்க வேண்டும், இருக்க முடியும் என்ற ஓர் எளிய சாதாரண மேம்போக்கான கருத்தைக் கூடத் தமிழர்கள் நினைத்துப் பார்க்க முடியாதவர்களாக! எண்ணிப் பார்க்க முடியாதவர்களாக! சிந்தித்துப் பார்க்க முடியாதவர்களாக! கருதிப் பார்க்க முடியாதவர்களாக! ஏமாளிகளாக இருக்கின்றார்கள். தமிழர்கள் இப்படிப் பட்ட இரங்கத் தக்க நகைப்பிற்குரிய பரிதாபகரமான நிலையை என் தாத்தாவும் எந்தையும் எவ்வளவோ முயன்றும் கூடத் திருத்த முடியவில்லை! திருத்த முடியவில்லை! திருத்த முடியவில்லை!

    அதாவது, என் தாத்தா காலத்திலேயே என் தாத்தாவால் தயாரிக்கப்பட்ட ஆதிசங்கராச்சாரியாரின் நான்கு மடாதிபதிகளுக்கும் அவர்கள் பிறாமணர்கள் என்று கூட எண்ணாமல் மிகப் பெரிய ஆச்சாரிய நிலையையும் குருநிலையையும் வழங்கினார்கள் தமிழர்கள். இதனால், தமிழர்களுக்குத் தங்களுக்குள் ஒருவர் தங்களுடைய ஆச்சாரியாராகவோ, குருவாகவோ இருக்க வேண்டும் அல்லது இருக்க முடியும் என்ற உணர்வே இல்லாமல் போய்விட்டது, போய்விட்டது, போய்விட்டது.

    அதாவது, இமயம் முதல் குமரி வரை உள்ள பிறாமணர்களில் படித்தவர், படிக்காதவர், சன்னியாசி, சம்சாரி, பெரியவர், சின்னவர், ஆண் பெண் என்ற வேறுபாடின்றி பிறாமணர்கள் அனைவருமே ஒரே கட்டுக் கோப்பாகவும், கட்டுப்பாடாகவும் திட்டமிட்டு 32வது ஆதிசங்கராச்சாரியார் புத்துயிர்ப்புச் செய்த பத்ரிநாத், துவாரகை, பூரி, சிருங்கேரி எனும் நான்கு மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகளையே சங்கராச்சாரியார் என்றும், ஆதிசங்கராச்சாரியார் என்றும், பீடாதிபதி என்றும், சன்னிதானம் என்றும்…. புகழ்ந்து புகழ்ந்து விளம்பரம் செய்திட்டார்கள்.

    இந்த வடஆரிய மாயையால், சதியால், சூழ்ச்சியால், கற்பனையால், திறமையால், பொய்யால்…. தமிழர்கள் அனைவருமே நான்கு யுகங்களாக இருந்து வரும் பதினெண்சித்தர் பீடாதிபதிகளை, குருமகாசன்னிதானங்களை, ஞானாச்சாரியார்களை, குருபீடங்களை, அருளுலக நாயகங்களை, அருளாணைத் தம்பிரான்களை, அருளுலகப் பண்டாரங்களை, அருளூறு குருதேவர்களை, பரம்பொருளின் வடிவான பண்டார சந்நிதிகளை, அருளுலகத் தலைவனான சிவனின் வாரிசுகளை…. மிக விரைவில் மறந்தார்கள், மறந்தார்கள், மறந்தார்கள்; துறந்தார்கள், துறந்தார்கள், துறந்தார்கள்.

    அதுவும் இம்மண்ணுலக வரலாற்றின் மிகப் பெரிய அரிய வீரிய சீரிய சாதனைகளைச் சாதித்த தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் காலத்திலேயே அரசர் முதல் ஆண்டி வரை பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரிய வேதமதத்தின் தலைவராக விளங்கிய நான்கு மடத்து சங்கராச்சாரியார்களையே தமிழர்கள் தங்களுடைய மெய்யான இந்துமதத்துக்கும் குருவாக, குருபீடமாக, சன்னிதானமாக, ஆச்சாரியாராக, தலைவராக, பீடாதிபதியாக ஏற்றுப் போற்றிக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்! ஏற்றுப் போற்றிக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்! ஏற்றுப் போற்றிக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்!

    அதாவது, இந்தியா முழுதும் சிதறிக் கிடந்த பிறாமணர்கள் ஆங்காங்கே ஒன்று கூடி தங்களால் இயன்றளவு முயற்சித்து பொருட்கொடைகளைப் பெற்றும் கெஞ்சிப் பிச்சையெடுத்தும் தங்களுடைய ஹிந்துமதத் தலைவர்களான மேற்படி நான்கு மடத்துச் சங்கராச்சாரியார்களையும் ஒருவர் பின் ஒருவராக வரவழைத்து விழாக்கள் கொண்டாடி மற்றவர்களையும் அந்த விழாவில் பங்கு பெற்று அந்தப் பிறாமண மதத்தலைவர்களையே தங்களுடைய தலைவர்களாகவும் கருதுமாறு செய்து விட்டார்கள்.

    அதாவது செம்மறியாட்டு மந்தையில் முன்னால் செல்லும் ஆடு எப்படி குதிக்கிறதோ, எந்த இடத்தில் தாவுகிறதோ, எங்குத் திரும்புகிறதோ, அதே மாதிரியே பின்னால் வரக்கூடிய அத்தனை ஆடுகளும் அந்தந்த இடத்தில் குதிக்கும், தாவும், திரும்பும். அதைப் போலவே, ஏறத்தாழ பெரும்பாலான தமிழர்கள் தங்களையும் பிறாமணர்களாகவே எண்ணிப் பிறாமணர்களின் குருமார்களைப் போற்றிப் புகழ்ந்து பணிந்து வணங்கிட்டார்கள்.

    அதாவது, பிறாமணர்கள்தான் இந்து மதத்தின் மூலவர்கள், காவலர்கள் என்ற கருத்தை ஏற்கனவே பெற்றிருந்த தமிழர்கள் காலடி ஆதிசங்கராச்சாரியார் புதுப்பித்த நான்கு மடத்தின் மடாதிபதிகளையுமே பதினெண்சித்தர்களின் மெய்யான இந்து மதத்தின் குருமார்களாக, தலைவர்களாக, மடாதிபதிகளாக, பீடாதிபதிகளாக, ஆச்சாரியார்களாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

    இந்த மாபெரும் நிகழ்ச்சி அல்லது நிகழ்வுதான் தமிழினத்தின் தாழ்ச்சி நிலை தொடர்ச்சி நிலையாவதற்குக் காரணமாயிற்று. …..”

    (திருமாளிகைத் தேவர் அவர்கள் கருவூர்த் தேவர் அவர்களின் மகன். கருவூர்த் தேவர் அவர்கள் தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டிய சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் ஒரே மகன். இவர்கள் மூவரும் தோன்றிச் செயல்பட்டதையே ‘மூவர் தோற்றம்’ என்ற நூல் விளக்குகின்றது.)


    தொடர்புடையவை: