Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • மெய்யான இந்துமதம்>
  • மணு தரும சாத்திரம்
  • மணு தரும சாத்திரம்

    மணு தரும சாத்திரம்

    இருக்கு வேதத்தில்தான், “இம்மண்ணுலகில், மொழி இனம் நாடு என்ற மூன்றும் உருவாக்கிடும் மதம்; இளமுறியாக் கண்டத்தில் எண்ணூற்றுக்கும் (800) மேற்பட்ட வகைகளைப் பெற்றிட்ட போதுதான், மானுடருக்கிடையே மதத்தின் பெயரால் ஓயாத போட்டி பொறாமைச் சண்டைச் சச்சரவுகளும், மதமாற்றுப் போர் வெறிகளும் பேரழிவை விளைவித்து விடாமல் தடுத்திடுவதற்காக …. ‘மணு நீதியார்’ எனப்படும் அனாதிசிவன் இம்மண்ணுலகுக்கு அனுப்பப் பட்டிட்டார் அண்டபேரண்ட அருளாட்சி நிகழ்த்திட்ட மூலப் பதினெண்சித்தர்களால்.

    “அந்த அனாதிசிவனார், இளமுறியாக் கண்டத்தில் இருந்த எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மதங்களை, சமாதானப் படுத்தவும், சமநிலைப் படுத்தவும், ஒருநிலைப் படுத்தவும், ஒற்றுமைப் படுத்தவும் முயற்சிக்கும் சாதனங்களாக அருளிட்ட ‘மணுநீதி நூல்கள் பதினெட்டும்’; அவற்றின் எளிமைப் படுத்தப்பட்ட ‘போதங்களாக’ (போதனைகள்),

    1. மணு தரும் சாத்தரம்,
    2. மணு தரும் சாத்திரம்,
    3. மணு தரும் சாத்திறம்,
    4. மணு தரும் முறை,
    5. மணு தரும் நெறி,
    6. மணு தரும் மரபு,
    7. மணு தரும் ஒழுகலாறு

    (குறிப்பு:- மணு தரும் என்ற சொல் ஏட்டு வழக்கில் ‘ம’கரத்தின் மீதுள்ள புள்ளி விடுக்கப்பட்டு ‘மணு தரும’ என்ற சொல்லாக உருப் பெற்றுள்ளது. எனவேதான், மேலே குறித்தவையெல்லாம், மணு தரும சாத்தரம், மணு தரும சாத்திரம், …. என்று வழக்காற்றில் குறிக்கப்படும் நடைமுறை தோன்றிற்று.)

    “இந்த ஏழு போதங்களும் கூட இளமுறியாக் கண்டத்து மக்களை மதவெறிகளிலிருந்து காப்பாற்ற முடியாமல் போயின.

    “இவற்றால் அண்டபேரண்ட அருளாட்சி நிகழ்த்திய மூலப் பதினெண்சித்தர்கள், இளமுறியாக் கண்டத்து மக்கள் எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மதத்தவர்களாக தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்து நின்று ஒருவரோடு ஒருவர் போரிட்டு மடிவதைத் தடுப்பதற்காக; இரண்டாவது கட்ட முயற்சியாக அனாதிக் காலத்தை முடித்து; ஆதிக்காலம் என்ற ஒன்றைத் தோற்றுவித்து இந்த உலகில் உள்ள அனைத்து மதங்களையும் ஒரே மதமாக இணைத்திடுவதற்காக ஆதிசிவனாரை அனுப்பி வைத்தார்கள்.

    “ஆதிசிவனார், ‘இம்மண்ணுலகில் உள்ள அனைத்து வேதங்களும், வேதமதங்களும் இந்துவேத மதமான இந்துமதம் எனும் ஆலமரத்தின் இலைகளாகவும், கிளைகளாகவும், விழுதுகளாகவும்தான் இருக்க முடியும்’ என்று அறிவித்து இந்துவேதத்தின் 396 நூல்களையும், இந்துமதத்தின் 36 நூல்களையும் அருளினார்.

    “அப்படி அருளிய பொழுதே, ‘இந்த இந்துவேத நூல்களையும், இந்துமத நூல்களையும் இந்துக்கள் போற்றிப் பேணிப் பயன்படுத்துகிற வரைதான் இந்துக்கள் தழைப்பார்கள், பிழைப்பார்கள். மற்றும் இவர்கள் இந்த இந்துக்கள், இந்துவேத நூல்களையும், இந்துமத நூல்களையும் புறக்கணிக்கவும், துறக்கவும், மறக்கவும், திரித்து வேறுபடுத்தியும் செயல்படுகின்ற காலத்து தாங்களும் தாழ்ச்சியுற்று; மற்ற மானுடரையும் தாழ்ச்சியுறச் செய்து மதப்போரில் சிக்கிச் சீரழிந்து திணறுவர்….’ என்று இருக்குவேதம் காண்டம்:1, மண்டலம்:1, நாள் உரைக்கோவை வாசகம்:1 - இன் முகப்புரையில் கூறுவதாகக் குறிக்கப்படுகிறது.” ……


    தொடர்புடையவை: