Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • ஆதிசங்கரர் வரலாறு>
  • ஆதிசங்கரர் வரலாறு
  • ஆதிசங்கரர் வரலாறு

    ஆதிசங்கரர் வரலாறு

    (வெள்ளாடை மேனியான், உச்சிக் குடுமியான், தென்பாண்டித் தமிழன், தமிழின் இந்துமதத்தைச் சமசுக்கிருத ஹிந்துமதமாக்கியோன்)

    (கருவூறார் வழிவந்த கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமி பிள்ளை அவர்கள் வழங்கியது.)

    ‘ஆதிசங்கரர்’ என்ற பெயர் இவர்தான் முதல் சங்கரர் என்ற பொருளில் வழங்கப்பட்டது அல்ல! ஆதிசிவன், ஆதிசங்கரன், ஆதிபரமசிவன், ஆதிவேதன், ஆதிநாதன் … என்ற பெயர்கள் சாதாரணமாக வழக்கில் உள்ளவைகள்தான். மேலும், ஞானத்துக்கே உரிய வைகாசித் திங்களில் சிவனுக்கே உரிய திருவாதிரை மீனில் (நட்சத்திரம்) வளர்பிறையில் பிறந்த ஆண்குழந்தைக்கு மேற்படி ஆதிசிவன், ஆதிசங்கரன்… என்கின்ற பெயர்கள் வைப்பதே மரபாகும். இதுவே பிறப்பியல் சாத்திறத்திலும், பெயரியல் சாத்திறத்திலும் உள்ள உண்மை.

    Adisankarar இன்றுள்ள மலையாள மொழி தோன்றி சில நூறு ஆண்டுகளே ஆகின்றது என்பதால், இந்த ஆதிசங்கரன் பிறந்த காலத்துச் சேரநாடு முழுவதும் தமிழ்மொழி பேசப்பட்டு அது தென்பாண்டித் தமிழகமாகத்தான் இருந்தது. எனவே, ஆதிசங்கரர் ஒரு தமிழ் அந்தணர் குடும்பத்தில் பிறந்தவரே. தமிழால் சிவன் கோயிலில் பூசை செய்யும் குருக்களான தமிழ்ச் சிவாச்சாரியார் குடும்பத்தில் பிறந்தவரே ஆதிசங்கரர். மிகத் தெளிவாகச் சொன்னால் சீர்காழித் திருஞான சம்பந்தர் தந்தையான சிவபாத இருதயரின் வழிவந்த சிவாச்சாரியாரியாரான தமிழ் அந்தணர் சிவகுருவின் மகனே ஆதிசங்கரர்.

    ஆதிசங்கரர் தமிழ்ச் சைவ கருணீக்க வேளாளர் குலக் கொழுந்தாய் பிறந்தவரே. (ஆதிசங்கரர் தோன்றிய அதே கருணீக்க சைவ வேளாளர் மரபில், சிவபூசையில் தேறிய சிவாச்சாரியார் குடும்பத்தில் தோன்றிய வடலூர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர், அருட்கொடை வள்ளல், அருட்பா வழங்கிய பேரருளாளர், ஞானசித்தர் இராமலிங்க அடிகளார் என்பது குறிப்பிடத் தக்கது)

    எனவே, கருணீக்க வேளாளர் மரபில் பிறந்த தமிழ் அந்தணர் சிவகுரு என்னும் சிவாச்சாரியாருக்கும், அவரது மனைவி ஆரியம்மாளுக்கும் (ஆரியம்மாள், ஆரியமாலா, ஆரியமாலை, ஆரியாத்தாள்… முதலிய பல பெயர்கள் ஏடுகளில் குறிக்கப் படுகின்றன. மேலும், இதுபோன்ற பெயர்களான ஆரியம்மாள், மாரியம்மாள், காளியம்மாள்… தமிழர்கள் மட்டுமே வைக்கக் கூடியவை) வைகாசித் திங்களில் வளர்பிறையில் திருவாதிரை நட்சத்திரத்தில் காலடியில் பிறந்த ஆண்மகவே ‘ஆதிசங்கரன்’.

    பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் கி.பி.785இல் முதல் விசயாலயனை அரசுக் கட்டிலில் அமர்த்தி அருட்பேரரசுக்கு வித்திட்டு விட்டு உலகச் சுற்றுப் பயணம் சென்று திரும்பிய காலத்தில் தென்பாண்டி தமிழகத்தில் தோன்றியவர். எனவேதான், இவரைப் பற்றி மிகத் தெளிவான குறிப்புக்கள் இவர் எழுதிய குருபாரம்பரியத்தில் காணப்படுகின்றன.

    சங்கரன் கி.பி. 785க்கும் மேலே பிறந்தான் என்பதே ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் குறிப்பு. ஆதிசங்கரர் இளமையிலேயே ‘கருவில் திருவுடையாராக’ மந்திர சித்திகளைப் பெற்று ஞானசித்தரானார். இவர் வாழ்ந்த காலம் உலகியலோடு தொடர்பு உடையது 32 ஆண்டு காலம். இறவாயாக்கைக்கும் பிறவாமைச் சத்திக்குமாக பூசையில் அமர்ந்தது நான்கு ஆண்டுகள்; ஆக மொத்தம் 36 ஆண்டுகள். தமிழில் பெரும்புலமை பெற்ற இவர் இந்தியாவில் இந்துமதத்தில் சமசுக்கிருதத்தின் பெயராலும், தமிழின் பெயராலும் பெரிய பிரிவினைகள் இருப்பதை முழுமையாக அகற்றுவதற்காகவே இவர் சமசுக்கிருதத்தில் மிகுந்த புலமை வளர்த்துக் கொண்டார்.

    இவரே தமிழிலிருந்து பெரும்பாலான இந்துமத இலக்கியங்களின் சாரங்களை சமசுக்கிருத மொழியில் உருவாக்கினார். ஆனால், இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போயின. பிறாமணர்கள் இவர் சமசுக்கிருத மொழியில் தமிழிலிருந்து மொழி பெயர்த்துக் கொடுத்த இலக்கியங்களை வைத்துக் கொண்டே தமிழைத் தாழ்த்தவும், தமிழினத்தை வீழ்த்தவும், மெய்யான இந்துமதத்தைச் சீரழிக்கவும், பொய்யான ஹிந்துமதத்தை வளர்க்கவும், பிறாமணர் தமிழர் என்ற பிரிவினையை அதிகமாக்கவும், இந்துமத சாத்திறச் சம்பிறதாயங்களை சாரமற்றவைகளாக ஆக்கவும், இந்துமத வரலாறுகளைக் குழப்பவும், … செய்து வருகின்றனர்.

    ஆதிசங்கரர் பதினெண்சித்தர் வகுத்த நெறிப்படி ஞானசித்தராகிறார் என்பதும்; இராமலிங்க அடிகளார் போல அருளுலக அநுபவங்களை வேதமாக எழுதினார் என்பதும், இராமலிங்க அடிகளார் போல் ‘ஆதிசங்கரரும் உச்சிக்குடுமி’ வைத்திருக்கிறார் என்பதும் (ஆதாரம்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் உள்ள ஆதிசங்கரர் சிலையில் காணலாம்) வெள்ளாடை அணிந்திருந்தார்; சிவபத்தராக விளங்கினார். பெண், பொன், மண் முதலியவைகளை மறுத்து வாழ்ந்தார்.

    இராமலிங்க அடிகளார் மற்ற கோயில்கள், ஆலயங்கள் தமக்குப் பிடிக்காத நிலையில் உள்ளன என்ற போது தமக்கென வழிபாட்டு நிலையங்களை வடலூரில் அமைத்துக் கொண்டார். ஆனால், ஆதிசங்கரரோ தமது மந்திர சத்தியால் பல கோயில்களின் அருளூற்றுக்களை அடைத்து விட்டார்; (திருவொற்றியூர், திருவானைக்காவல், …) அருள் ஆற்றல்களைக் குறைத்து விட்டார். முப்பத்தாறு வயதிலே உடலையும், உயிரையும் நிலைப்பேறு செய்து சமாது ஆகிவிட்ட இளைஞரே ஆதிசங்கரர் என்பதால் இளமைக்கே உரிய வீராவேசத்துடன் ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்பது போல் எண்ணற்ற கோயில்களை பாழாக்கி விட்டார். அதாவது பிறாமணர்களும், சமசுக்கிருத மொழியும் நுழைய முடியாதிருந்த பல கருவறைகளை அடக்கி ஒடுக்கி சிதைத்துச் சீரழித்துத் தமது மந்திரச் சித்திக்கு வெற்றிச் சின்னங்களாக்கி பிறாமணர்களுக்கும், சமசுக்கிருத மொழிக்கும் இனாமாகக் கொடுத்தார்.

    எனவேதான், கருணீக்க வேளாளர் மரபில் தோன்றிய (கெளனிய மரபு, கெளனிய கோத்திறம், தமிழ் அந்தணர், சைவ வேளாளர், சிவாச்சாரியார், … ஒன்றே) சேரநாட்டுச் சிவாச்சாரியக் குலத் திருச்செல்வனான ஆதிசங்கரனைத் தங்களுடைய பிறாமண இனத்தவனாக, வட ஆரிய இனத்தவனாக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டிட்டார்கள். காலப்போக்கில் ஞானசித்தனான ஆதிசங்கரனை பிறாமண ஆச்சாரிய பீடமாக்கி பிறாமண வேதத்துக்குரிய காவியுடை உடுத்திய மொட்டைத் துறவியாக ஓவியங்களிலும், சிற்பங்களிலும், இலக்கியங்களிலும் சித்தரித்துக் காட்டினர்.

    எனவே, தமிழ் இலக்கியக் கருத்துக்களை சமசுக்கிருத மொழியில் மொழி பெயர்த்ததை ‘அனைத்தும் சமசுக்கிருத மொழியில் எழுதியவை, அனைத்தும் சமசுக்கிருத இலக்கியத் தொடர்புடையவை’ என்று கூறப்பட்டு விட்டன.

    மேலும் இவர்களின் அண்டப் புளுகு, ஆபாசப் பொய், காட்டுமிராண்டித்தனமான கற்பனை என்னவென்றால் சமசுக்கிருத மொழியே தெரியாத வியாசரும், கண்ணதேவரும், வால்மீகிகளும், யக்ஞவல்லிகளும், சிவனும், முருகனும், … சமசுக்கிருத மொழியில்தான் அனைத்தையும் கூறியுள்ளார்கள் என்று சித்தரித்துக் காட்டியிருப்பதுதான்.

    சமசுக்கிருதம் என்ற குழந்தை பிறந்து 2000 ஆண்டுகள்தானாகிறது; ஆனால், இது 43,73,040 ஆண்டுகளுக்கு முந்திய இந்து மதத்திற்கும், இந்துமத இலக்கியத்திற்கும் அனைத்து வகையான பூசாவிதிகளுக்கும் … உரிமை பாராட்டுகிறது. இப்படி, இந்த சமசுக்கிருதம் பழமையோடும், தமிழோடும் உறவாடுவதற்குரிய வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்த ஆதிசங்கரனை எண்ணற்ற ஏமாற்றுகளின் மூலம் தங்களுடையவனாக்கிக் கொண்டிட்டார்கள்.


    தொடர்புடையவை: