மேலைய நாட்டில் தாய்மொழிப் பற்று:-
உலகம் முழுவதும் நன்கு பரவிக் கிடக்கக் கூடிய கிறித்துவ மதத்தில் ஒரு காலத்தில் இலத்தீன் (The Latin Language) மொழியிலேதான் அனைத்து வகையான பூசைகளும் நடந்தன. அந்த மதத்திற்குரிய அடிப்படையான, உயிர்நாடியான மூல வேத நூலான விவிலியம் (The Bible) இலத்தீன் மொழியில்தான் இருந்தது. மத குருமார்களாகப் பணிபுரியும் பாதிரியார்களும் மதத்தை புரிந்து கொள்ளவும் அல்லது மதத்தின் சடங்குகளையும், பூசைகளையும் செய்து சத்தியும் சித்தியும் பெற விரும்புகிறவர்களும் கட்டாயமாக இலத்தீன் மொழியைக் கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
இந்த இலத்தீன் மொழிதான் ‘அருளுலக ஆட்சி மொழி’, ‘பூசைமொழி’, ‘தவமொழி’, ‘தெய்வமொழி’, ‘தேவமொழி’ .... என்று நம்பப்பட்டது. இந்த ‘இலத்தீன் மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் கடவுள் அருளை, தெய்வீகச் சத்தியைப் பெற்றுத் தராது, பெற்றுத் தர முடியாது; இந்த இலத்தீன் மொழிக்கு எதிராக அல்லது மாறாக அல்லது வேறாகச் சிந்திப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மதவிரோதிகளாவார்கள்; நாத்திகராவார்கள்; கடவுள் மறுப்பாளர்களாவார்கள்; மிகப் பெரிய பாவிகளாவார்கள்; தேவ தண்டனைக்குரியவராவார்கள்..... என்ற கருத்து கிறித்துவ மதத்தில் மிகத் தெளிவான ஆணித்தரமான கருத்தாக இருந்தது.
எனவே, ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்ந்த தாய்மொழிப் பற்றாளர்கள், தங்களுடைய தாய்மொழியிலேயே தங்களுடைய மத வேத நூலான விவிலியத்தைப் படிக்கவும், பூசைகளைச் செய்யவும், மதச் சடங்குகளைச் செய்யவும் மாறாத வேகத்தோடு ஏங்கித் தவித்தார்கள். அவர்களின் ஏக்கங்களை மதத் தலைமைப் பீடமும், மதக் குருமார்களும், இலத்தீன் மொழி வெறியர்களும் தவறானதாக, மிகப் பெரிய ஆபத்துக்குரியதாக, கொடிய நோயினும் அஞ்சத் தக்கதாக, மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாக.... நினைத்தார்கள்! நினைத்தார்கள்! நினைத்தார்கள்!
இதனால், கிறித்துவ மத வாதிகளும், மதத் தலைவர்களும் தாய்மொழிப் பற்றென்பது மத விரோதமான உணர்வு என்றும் மதத் துரோகமான உணர்வு என்றும், மன்னிக்க முடியாத மாபெரும் குற்ற உணர்வு என்றும் கருதினார்கள். இம்மட்டின்றி, தாய்மொழிப் பற்றென்பது தேவையற்றது, பயனற்றது, வெறுமையானது, மத வறுமையைத் தரக் கூடியது, மத ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரானது. எனவே, மத நம்பிக்கையுள்ள யாரும் தாய்மொழிப் பற்றை வளர்க்கக் கூடாது. தாய்மொழிப் பற்றோடு வாழ்பவர்கள் மத வலிமையை நலிவடையச் செய்பவர்களாவார்கள். இந்தத் தாய்மொழி வெறியர்களால் மதத்தின் வளவளர்ச்சி குன்றும், குறையும்; மதத்தின் பொலிவு மங்கும், மறையும்; மதத்தின் செல்வாக்கும் ஆட்சி நிலையும் பாதிப்பிற்கு உள்ளாகும். எனவே, அனைவரும் தாய்மொழிப் பித்து என்ற பைத்தியக் காரத்தனத்தை, வெறியை, கொடிய நோயை... எப்பாடுபட்டாவது தடுத்தேயாக வேண்டும்; காலப் போக்கில் முற்றிலும் அகற்றியேயாக வேண்டும் என்ற கருத்தோட்டத்தைப் படாத பாடுபட்டுப் பரப்பினார்கள்.
இந்தக் கருத்தின் வளர்ச்சிக்காக அருளுலக மொழியாக ஆட்சி புரிந்த இலத்தீன் மொழியைப் பொருளுலக ஆட்சி மொழியாக்குவதற்குரிய முயற்சியாக்கினார்கள். எனவே, தாய்மொழிப் பற்றாளர்கள் மத நிறுவனத்தின் மீதும், நிர்வாகத்தின் மீதும் கசப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்ள நேரிட்டது. அந்தக் கசப்புணர்ச்சி எரிமலையாக வெடித்தது. அதன் பயனாக, 12ஆம் நூற்றாண்டில் பீட்டர் வால்டோ (Peter Waldo) என்ற ஒரு பெருஞ் செல்வர் முதன் முதலில் விவிலிய நூலை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்த மொழிபெயர்ப்பு காட்டுத்தீ போல் எங்கும் பரவியது. அது கண்டு கிறித்துவ மதத் தலைவர்கள் பயந்தார்கள். பிரெஞ்சு மொழிப் பற்றினால் மதத்தின் ஆட்சிமொழியாக இருந்த இலத்தீன் மொழிக்கு ஆபத்து வந்ததென்றும், அந்த ஆபத்து விரைவில் மதத்திற்கு வந்து விடும் என்றும் அச்சப்பட்டார்கள்.
அதனால் மத குருமார்களும், மதத் தலைவர்களும், மதவாதிகளும், “மதத்தின் ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும், மத உலகில் ஒரே ஒரு மொழிதான் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும்” என்றும்; அதாவது “மதத்துறையில் ஒரேஒரு மொழி ஆட்சிமொழியாக இருந்தால்தான் மதத்துறையில் ஒற்றுமையும், பற்றும், பாசமும், சமத்துவமும், சகோதரத் தத்துவமும் விளைந்திடும்! விளைந்திடும்! விளைந்திடும்!” என்றும் ஒரே குரலில் கூக்குரலிட்டார்கள்.
இதனால் தாய்மொழிப் பற்றுடையவர்களுக்கும், மதப்பற்றுடையவர்களுக்கும் இடையில் நேரடியான போராட்டங்களும், போர்களும் உண்டாயின. அதாவது மதவாதிகள் அனைவரும் ஒருமித்த கருத்தில் வெறிகொண்ட நிலையில் “தாய்மொழிப் பற்றாளர்கள் அனைவரும் மதத் துரோகிகளாவார்கள், விரோதிகளாவார்கள், மாபெரும் துரோகிகளாவார்கள், கொடிய தண்டனைக்குரிய குற்றவாளிகளாவார்கள்....” என்ற கருத்துடையவர்களாகச் செயல்பட்டார்கள். இதனால், மதவாதிகள் தாய்மொழிப் பற்றாளர்களை தங்களுடைய பகைவர்களாகவே நினைத்து வெறுத்து ஒதுக்கினார்கள்.
இப்படித் தாய்மொழிப் பற்றென்பது மத வளர்ச்சியையும், வலிமைமிகு ஆட்சியையும், பற்றுமிகு ஒற்றுமையையும், பத்திமிகு ஒருமைப்பாட்டையும் குலைத்துச் சிதைத்துச் சீரழித்து விடும் என்ற அச்ச உணர்வு எரிமலை என வெடித்து நெருப்புக் குழம்பை ஆறாக ஓடவிட்டுக் கொண்டிருந்தது. எண்ணற்ற அப்பாவி மக்கள் ஏமாளித்தனமாகவும், கோமாளித்தனமாகவும் தங்களுடைய தாய்மொழியை வெறுக்கவும், மறுக்கவும் தொடங்கினார்கள். இவர்கள் தாங்களே தங்களுடைய தாய்மொழிக்குத் துரோகிகளாகவும், விரோதிகளாகவும் மாறினார்கள். அதன் பயனாக இலத்தீன் மொழிக்கு வெறிபிடித்த அடிமைகளானார்கள். இலத்தீன் மொழியைப் பரப்புவதற்காக போர்க்கொடி தூக்கினார்கள். ‘இலத்தீன் மொழியை மறுப்பவர்கள் மதத்துறையில் இருக்கத் தேவையில்லை’ என்ற அறிவிப்பை விடுக்கலானார்கள்.
இப்படி ஐரோப்பாக் கண்டத்தில் மத ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும் தாய்மொழித் துரோகிகளும், விரோதிகளும் புற்றீசல்கள் போல் வெளிப்படலானார்கள். அது மட்டுமல்ல, மதவெறி பிடித்தவர்கள் எல்லோரும் இலத்தீன் மொழியின் அடிமைகளாகவும், கங்காணிகளாகவும், காவடிகளாகவும், பாதுகை ஏந்திகளாகவும், பாதுகாவலர்களாகவும் மாறினார்கள், மாறினார்கள், மாறினார்கள். இதன் விளைவாக, ‘இலத்தீன் மொழி படிப்பதே மெய்யான மத வாழ்வு’, ‘இலத்தீன் மொழிக்குத் தொண்டு செய்வதே மெய்யான மதத் தொண்டு’, ‘இலத்தீன் மொழியை விரும்புவதே இறையன்பைத் தரும்’, ‘இலத்தீன் மொழியே மதத்தின் உயிர்’, .... என்ற கருத்துக்கள் பிறந்தன.
ஆனால்,
- ‘தாய்மொழி வழியாகத்தான் இன உணர்வும், நாட்டுணர்வும் முளைத்துக் கிளைத்துச் செழித்து வளர்கின்றன’,
- ‘தாய்மொழி உணர்வில்லாத மனிதன் விழியில்லாத மனிதனாவான்’,
- ‘தாய்மொழிக்குத் துரோகம் செய்பவன் எந்த இழிந்த செயலையும் செய்யக் கூடிய நீச்சப் பிறவியாவான்’,
- ‘தாய்மொழியைத் துறந்து மறந்து திரிபவன் கொடிய விலங்கினும் கொடியவன்’,
- ‘தாய்மொழியை விட்டுக் கொடுப்பவன் துட்டுக்காகத் தாயையும் தாரத்தையும் விலைக்கு விற்பவனை விடக் கேவலமானவன்’,
- ‘தாய்மொழிக்காகப் போராடாதவன் கோழையினும் கேடு கெட்டக் கோழையாவான்’,
- ‘தாய்மொழி வழியாக வாழாதவன் அனாதையினும் கேடுகெட்ட அனாதையாவான்’,
- ‘தாய்மொழிக்காக வாழுகிறவனே உய்வும் உயர்வும் பெறுபவன்’,
- ‘தாய்மொழி யறிவே தூய்மையும் வாய்மையும் தெய்வீகத் தன்மையும் வழங்கும்’,
- ‘தாய்மொழிப் புலமை இல்லாதவன் நோயுற்ற நொண்டியாவான்’,
... என்பன போன்ற கருத்து வாசகங்கள் போர் ஆயுதங்களாகப் பயன்பட்டன. இந்த ஆயுதப் போரில் ஐரோப்பாக் கண்டத்து தாய்மொழிப் பற்றாளர்களே வெற்றி பெற்றார்கள்! வெற்றி பெற்றார்கள்! வெற்றி பெற்றார்கள்!
இதனால்,
- ‘தாய்மொழியை மதிக்கத் தெரிந்தவனுக்கே தன்னையீன்ற தாயையும் மதிக்கத் தெரியும்’;
- ‘தாய்மொழி உணர்வுள்ளவனுக்கே மனிதப் பண்பிருக்கும்’,
- ‘தாய்மொழிப் பாசமில்லாதவனிடம் அன்புணர்வே இருக்காது’,
- ‘தாய்மொழிக்காக வாழாதவன் வாழ்க்கை பேய் வாழ்க்கை’,
- ‘தாய்மொழியைக் காட்டிக் கூட்டிக் கொடுத்து வாழ்பவனை விட காட்டுமிராண்டி வேறு யாருமில்லை’,
- ‘தாய்மொழியை நினைக்காதவனை விட மானங்கெட்டவன் வேறு யாருமில்லை’,
- ‘தாய்மொழிக்காகப் போராடாதவன் வாழ்க்கை பயனற்ற வாழ்க்கையே’,
- ‘தாய்மொழியைப் போற்றிப் பேணாதவனை விடக் கடைந்தெடுத்த அயோக்கியன் வேறு யாருமில்லை’,
- 'தாய்மொழித் துரோகியாக வாழ்பவனை விடப் பெரிய சமூக நல விரோதி வேறு யாருமில்லை’,
... என்பன போன்ற கருத்து வாசகங்கள் வெற்றி விழா முழக்கங்களாக வெளிவந்தன.
இந்த மொழிபெயர்ப்பைப் பொதுமக்கள் கேட்கக் கூடாது என்று மதகுருமார்களும், மதத் தலைவர்களும், மதவாதிகளும் அறிவிப்புக்கு மேல் அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டே யிருந்தார்கள். இந்தக் கண்மூடித் தனமான மத வெறியர்களுக்கு முன்னால் உண்மையான தாய்மொழிப் பற்று அடங்கி ஒடுங்கிப் போய்விடவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாகத் தெருக்களில் கூடி நின்று பேராசிரியர் சான் வைக்கிலிப்பின் விவிலியத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படிக்கச் சொல்லிக் கேட்கலானார்கள்.
அப்பொழுது, மத வெறியர்களின் வற்புறுத்தலினால் அரசாங்கம் தனது காவலர்களை அனுப்பி தெருக்களில் கூடிடும் மேற்படிக் கூட்டத்தைச் சாட்டையால் அடித்து கலைந்து செல்லுமாறு ஆணையிட்டார்கள். ஆனால், தாய்மொழியின் மீது பற்றும், பாசமும் அளவுக்கு மேல் வைத்திருந்த மக்கள் சவுக்கடி பட்டுக் கொண்டே ஆங்கில மொழியிலிருந்த விவிலியத்தைத் தெருக்களில் நின்று உரக்கப் படித்தும், படிக்கக் கேட்டும் மகிழ்ந்தார்கள். இப்படித் தாய்மொழிக்காக அமைதி வழியில் புரட்சி செய்து தெருக்களில் நின்று சவுக்கடி பட்ட மக்களின் வீர வரலாறு உலக வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற்றது.
அதாவது, தாய்மொழிக்காகச் சவுக்கடி பட்டுக் குருதி கொட்டத் தயாராக இருப்பவர்கள்தான் தூய்மையானவர்கள், வாய்மையானவர்கள், தாய்நாட்டுப் பற்று மிக்கவர்கள், உண்மையான மனிதப் பண்புடையவர்கள் - என்ற உண்மை சவுக்கடி பட்ட மக்களின் உடலிலிருந்து கசிந்து சிந்திய குருதியால் எழுதப் பட்டது! எழுதப் பட்டது! எழுதப் பட்டது! இது கண்டுதான் உலகெங்கும் உள்ள மக்கள் விழிச்சி பெற்று எழிச்சி பெற்றுத் தங்கள் தங்களின் தாய்மொழியின் வாயிலாகவே அனைத்து வகையான நிகழ்ச்சிகளும், ஆட்சிகளும் நிகழ்ந்தே தீர வேண்டும் என்று போராடத் துவங்கினார்கள்.